திடீர் பணக்காரன் ஆக ஆசைப்பட்டேன்.... வங்கியில் கொள்ளையடித்தேன்... இந்தியன் வங்கி கொள்ளையன் பரபர
திடீர் பணக்காரனாக மாறுவதற்காகத்தான் அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்ததாக கொள்ளையன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஐஸ் வியாபாரம் செய்தும் வசதியாக வாழ இயலவில்லை, இதனால் திடீர் பணக்காரன் ஆக வேண்டும் என்பதால் அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்தேன் என்று கொள்ளையன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று மதியம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் (42) என்பவர் வாடிக்கையாளர் போல் உள்ளே சென்றார்.
பின்னர் துப்பாக்கி முனையில் வங்கியிலிருந்து ரூ. 6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு
கொள்ளையடித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் மணீஷ் குமார் தப்பி சென்றார். அப்போது அவரை போலீஸார் பொதுமக்களின் உதவியுடன் மடக்கி பிடித்தனர். எனினும் அவர் போலீஸார் மற்றும் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
சுற்றி வளைப்பு
இந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து போலீஸார் அவரை எப்படியோ மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஏன் வங்கியில் கொள்ளை அடித்தேன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர் போலீஸுக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஐஸ் வியாபாரம் செய்து வந்தேன். நீண்ட நாட்களாக வியாபாரம் செய்து வந்தபோதிலும் வசதியாக வாழ முடியவில்லை.
குறுக்கு வழியிலாவது
எப்படியாவது திடீர் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இதனால் குறுக்கு வழியிலாவது என் ஆசையை தீர்த்து கொள்ள திட்டம் போட்டேன். வங்கியில் கொள்ளையடித்தால் மட்டுமே எனது ஆசை நிறைவேறும் என நினைத்தேன்.
கொள்ளை சம்பவம்
பின்னர் சில நாட்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றிருந்த போது அங்கிருந்து 2 துப்பாக்கிகளை வாங்கி வந்தேன். அதை வைத்து மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டேன் என்று மணீஷ்குமார் வாக்குமூலம் அளித்தார்.