யாருக்கு தேவைப்பட்டால் ஜெயலலிதா மரணத்தை விசாரிப்பீங்க திரு. தம்பிதுரை??
சென்னை: அதிமுக இணைப்பு தொடர்பாக குழு அமைக்கப்படும். அந்தக் குழு முடிவு செய்தால், தேவைப்பட்டால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று தம்பித்துரை கூறியுள்ளார். இவர்களுக்குத் தேவைப்பட்டால்தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பார்களா என்ற புதிய சலசலப்பு தற்போது எழுந்துள்ளது.
அதாவது ஜெயலலிதா மரணத்தை தங்களுக்கு தேவையான வகையில் எடுத்தாளுவோம் என்று இவர்கள் மறைமுகமாக கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் உள்ளன என்பதை இவர்களே மறைமுகமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தை வைத்து இன்னும் பல காலத்திற்கு இவர்கள் அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள் புலம்புகின்றனர். பொதுமக்களோ இவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று சிரிக்கிறார்கள்.
இணையும் அதிமுக
சசிகலா சிறைக்குப் போய் விட்டார். தினகரனுக்கும் நாலாபுறங்களிலும் நெருக்கடி. இதை வைத்து சசிகலா குடும்பத்தை அதிமுகவை விட்டு துரத்த சிலர் கடுமையாக முயலுகின்றனர். அதில் ஒரு பகுதி வெற்றி கிடைத்துள்ளது. ஒதுங்கிக் கொள்வதாக கூறி விட்டார் தினகரன். தற்போது இரு பிரிவு அதிமுகவையும் இணைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
குழு அமைப்பு
அதிமுக இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதாவது பதவிகள் குறித்து பேரம் பேச ஒரு குழு அமைக்கவுள்ளனர். அந்தக் குழு கூடி யாருக்கு என்ன பதவி, யாருக்கு அமைச்சரவையில் இடம், முதல்வர் பதவி யாருக்கு என்பது உள்ளிட்டவை குறித்து பேசப் போகிறது.
ஜெயலலிதா மரணம்
ஓ.பி.எஸ் கோஷ்டி முன்பிருந்தே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டு வருகிறது. ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்றே இத்தனை காலமும் சசிகலா கோஷ்டி கூறி வந்தது. தற்போது ஓ.பி.எஸ் கோஷ்டி, சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் (இப்போது வரை அதுதான் உண்மை) இணையப் போவதால் இந்தக் கோரிக்கை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தம்பித்துரை பேச்சு
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தம்பித்துரையிடம் கேட்டபோது, கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களையவே இரு அணிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம். கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களையவே முயற்சி மேற்கொண்டுள்ளோம். சசிகலா பொதுச் செயலாளராக தொடர்வது குறித்து இரு குழுக்களும் சேர்ந்து தான் முடிவு செய்யும். குழு முடிவு எடுத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார்.
அது என்ன தேவைப்பட்டால்?
அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களுக்கு இந்த நிமிடம் வரை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது. தமிழக மக்களுக்கும் அதுகுறித்த உண்மை தெரிவிக்கப்படவில்லை. கூடவே இருந்த சசிகலாவும் எதுவும் சொல்லவில்லை. மருத்துவமனைக்குள் அடிக்கடி போய் வந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட யாருமே உண்மையைச் சொல்லவில்லை. எனவே ஜெயலலிதா மரணம் என்பது நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
மரணத்தை வைத்து அரசியலா?
இந்த நிலையில் குழு முடிவு செய்தால் விசாரிப்போம், தேவைப்பட்டால் விசாரிப்போம் என்று தம்பிதுரை கூறுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால் ஜெயலலிதா மரண விவகாரத்தை தங்களுக்கு ஏற்றபடி கையாண்டு வருவதாக தம்பிதுரை ஒத்துக் கொள்கிறாரா. தேவைப்பட்டால்தான் விசாரிப்போம் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்போம் என்று பகிரங்கமாக கூற அவர் ஏன் தயங்குகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேள்விகள் நிறைய இருக்கிறது.. உரிய பதில்தான் வருமா என்று தெரியவில்லை.