என்ஜீனியரிங்கில் 'அரியர்ஸ்' முறை ரத்து மாணவர்களுக்கு நல்லதா, கெட்டதா?
என்ஜினியரிங் கல்லூரிகளில் அரியர்ஸ் முறை ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கு சாதகமா பாதகமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான அரியர்ஸ் முறை மாற்றம் மாணவர்களுக்குப் பயனளிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் அரியர்ஸ் என்ற வார்த்தையே ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரியர்ஸ் என்பதற்கு பதிலாக மறு முறை தோன்றல் (re - appearing) என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது இது வரை அரியர்ஸ் என்றால் பொறியியல் மாணவர்கள் அடுத்த முறை பருவத் தேர்வை எழுதலாம். ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தேர்வு எழுதும் போதும் இன்டர்னல், எக்ஸ்டெர்னல் என்று இரண்டு விதமான தேர்வு எழுத வேண்டும். இன்டர்னலுக்கு 20 மதிப்பெண்களும், எக்ஸ்டெர்னலுக்கு 80 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும். தற்போதைய நடைமுறையில் அரியர்ஸ் தேர்வு எழுதும் போது எக்ஸ்டெர்னல் மட்டும் எழுதினால் போதும்.

இன்டர்னலும் எழுத வேண்டும்
ஆனால் அரியர்ஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் மாணவர்கள் இனி இன்டர்னல் தேர்வும் எழுத வேண்டும். முதல் ஆண்டு பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் மூன்று அல்லது ஐந்தாவது பருவத் தேர்வின் போது இன்டர்னல், எக்ஸ்டர்னல் இரண்டையும் சேர்த்து தேர்வு எழுத வேண்டும்.

ஓராண்டு பொருத்தே தேர்வு
அரியர்ஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒரு வேளை இறுதியாண்டில் அரியர் வைத்தால் ஓராண்டு பொறுத்திருந்தே தேர்வு எழுத முடியும். எனினும் மாணவர்களுக்கு இன்டர்னலில் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். இன்டர்னல் மதிப்பெண் ரத்து செய்யப்படுவதால் ஆசிரியர்களை பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள்.

வகுப்பிலும் இணையலாம்
மேலும் மாணவர் விரும்பும் பட்சத்தில் தான் தோல்வியடைந்த பாட வகுப்பில் மீண்டும் படிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் மாணவர்கள் அந்தப் பாடத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

விருப்பப் படிப்பு
இதே போன்று பொறியியல் படிப்பில் 8 செமஸ்டர்களிலும் தேர்ச்சி பெற்று 8.50 கிரேடு மதிப்பெண்கள் இருக்கும் பட்சத்தில் இறுதியாண்டில் தொழிற்சாலை அல்லது வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று இன்டர்ன்ஷிப் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மாணவர்களுக்கு டிஸ்டிங்ஷன் கிளாஸ் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது, தற்போதைய நிலையில் பார்க்கும் போது, புதிய முறை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உதவும் என்றே கல்வியாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications