தினகரனுடன் இணைந்து ஸ்டாலின் கூட்டணி ஆட்சி? திமுகவை குழப்பி பெயரை கெடுக்க சதியா?
தினகரனுடன் இணைந்து ஸ்டாலின் கூட்டணி ஆட்சி அமைப்பார் என பரப்புவதே திமுகவின் பெயரை கெடுக்கத்தானோ என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலர் தினகரனுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இணைந்து கூட்டணி அரசு அமைப்பார் என திரும்ப திரும்ப சொல்லப்படுவதே திமுகவின் பெயரை கெடுக்க நடக்கும் சதியோ என்கிற கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டைத் தவிர ஆட்சி அமைக்கும் வல்லமை எந்த கட்சிக்கும் இல்லை என்பது யதார்த்தம். தற்போது அதிமுக கபளீகரம் செய்யப்பட்டு அதன் வாக்கு வங்கிக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவைப் போல திமுகவையும் கலகலக்க வைக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டன. ஆனால் திமுகவில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை.
21 பேர் வாபஸ்
தற்போது தினகரன் அணி விஸ்வரூபமெடுத்துள்ளது. தினகரன் ஆதரவு 21 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இல்லை
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதேநேரத்தில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் தினகரன் அணி இணைந்தால் பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
திமுக- அதிமுக பலம்
திமுக அணி தரப்பில் 98 எம்.எல்.ஏக்களும் தினகரன் தரப்பில் 21 எம்.எல்.ஏக்களும் இணைந்தால் 119. பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்தான். இருப்பினும் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்குமா? என்பது சந்தேகமே என கூறப்பட்டு வருகிறது.
தினகரன், ஸ்டாலின் கூட்டணி அரசு
இந்நிலையில் திடீரென ஸ்டாலின்- தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறார்கள் என்கிற கருத்து பரபரப்பட்டு வருகிறது. பதவிக்காக கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க மாட்டோம் என ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
பெயரை கெடுக்கும் சதியா?
ஆனால் தொடர்ந்து ஸ்டாலின்-தினகரன் கூட்டணி ஆட்சி அமைகிறது என பரப்புவதன் மூலமாக பதவிக்காக இருவரும் கூட்டு சேருகிறார்கள் என்கிற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தி திமுகவுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் சதியோ என்கிற கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.