சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக?.. பெரும் கவலையில் தொண்டர்கள்!
சென்னை: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க என்ற மிகப் பெரிய கட்சியும், அதன் அரசியல் நடவடிக்கைகளும் தற்போது சசிகலா குடும்பத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யாரெல்லாம் வேண்டாம் என்று ஜெயலலிதா துரத்தி விட்டாரோ, அவர்கள் எல்லாம் தற்போது மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் அடைக்கலமாகிவிட்டதால் அதிமுக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
திவாகரன், டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் என்று எல்லோரும் இப்போது போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ராவணன் கூட இப்போது அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றிருக்கிறார். ஆனால் முன்னாள் வளர்ப்பு மகனை மட்டும் கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டனர்.
சசிகலா நடராஜன்
எம். நடராஜன் வீடும் பரபரப்பாக இருக்கிறது. பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் நடராஜன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே, இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக போயஸ் கார்டன், அப்போலோ மருத்துவமனை மற்றும் அ.தி.மு.க இருக்கிறது. அதிமுகவிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலாவின் கை ஓங்கிவிட்டது.
சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா
முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது சசிகலா, இளவரசி தவிர வேறு யாருக்கும் தெரியாத ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். இரண்டாவது தளம் வரை அனுமதிக்கப்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, தம்பிதுரைக்கோகூட முதல்வர் இருக்கும் அறைப்பக்கம் செல்ல அனுமதி இல்லை. எந்த அறையில் முதல்வர் இருக்கிறார் என்பதைக் கேட்கும் தைரியம்கூட அவர்களுக்கு இல்லை.
எல்லாமே ரகசியம்
சசிகலா ஓய்வெடுக்கும் சூட் ரூம் ரிசப்சனுக்கு மட்டுமே தம்பித்துரையும், பன்னீர் செல்வமும் போகலாம். வரலாம். அதுவும் காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே. அதன்பிறகு மருத்துமனையில் என்ன நடக்கிறது என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் பன்னீர் செல்வம் மட்டும் 12 மணி அளவில் மேலே போய் விட்டு 3.25 மணிக்குத்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்.
சசிகலா குடும்பத்தினர் ஆலோசனை
சசிகலா குடும்பத்தினர் 3 மணி நேரத்துக்கும் மேல் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார்களாம். அந்த ஆலோசனையின்போது இளவரசி, டாக்டர் சிவகுமார், விவேக் ஆகியோர் மட்டும் உடன் இருந்தார்களாம். என்ன நடந்தது என்பதை பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லையாம். பன்னீர் செல்வமும் இதுபற்றி மூச்சு கூட விடவில்லையாம்.
சோகத்தில் பன்னீர் செல்வம்
புதன்கிழமையன்று சசிகலா குடும்பத்தினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திவிட்டுவந்ததில் இருந்தே பன்னீர்செல்வம் சோகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நேற்றைய தினம் வழக்கம் போல அப்பல்லோ மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வந்தபோது ஓ.பன்னீர்செல்வமும் வந்துவிட்டார். தம்பிதுரையுடன் சற்றுநேரம் நின்று பேசிக்கொண்டிருந்தவர், உடனடியாக தனது கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள வீட்டிற்குப் போய் எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் 12 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். தம்பிதுரையிடம் ஒரு கவரில் எதையோ கொண்டு வந்து கொடுத்தாராம் பன்னீர்செல்வம்.
சசிகலாவின் கட்டுப்பாடு
சசிகலா குடும்பம் பன்னீர்செல்வத்துடன் நடத்திய ரகசிய கூட்டத்திற்கும், நேற்று பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து கவரை கொண்டுவந்து தம்பிதுரையிடம் கொடுத்ததற்கும் எதுவும் சம்பந்தம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. என்னமோ நடக்குது... அதை என்னன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க என்று அமைச்சர்களே புலம்பத் தொடங்கியுள்ளனராம்.
ஜெயலலிதா நலம் பெற வேண்டும்
ஜெயலலிதா உடல்நிலை சார்ந்த விஷயங்கள் சசிகலா குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்சி சார்ந்த விஷயங்களையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றே சொல்கிறார்கள். அதிமுகவின் உண்மை தொண்டர்ககள் மத்தியில் எழுந்துள்ள எல்லா சந்தேகங்களுக்கும் ஜெயலலிதா விரைவில் நலம்பெற்று வந்து பதில் சொல்ல வேண்டும் என்பதே அனைவரின் பிராத்தனையாக உள்ளது. அக்டோபர் 17ம் தேதி கட்சி தொடக்க விழாவை கொண்டாட ஜெயலலிதா எழுந்து வந்து விடுவார் என்றே நம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள்.