போயஸ் தோட்டம் யாருக்கு.... அத்தை சசிதான் சொல்வார்... திவாகரன் மகன் ஜெயானந்த்
போயஸ் தோட்டம் யாருக்கு என்பது குறித்து அத்தை சசிகலாதான் சொல்வார் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.
சென்னை: போயஸ் தோட்டம் யாருக்கு என்பதை எனது அத்தை சசிகலாதான் சொல்வார் என்று இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் ஜெயானந்த் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக தனக்குதான் சொந்தம் என்றும், அத்தையின் அரசியல் வாரிசு தான்தான் என்றும் தீபா வேறு கிளம்பினார்.
அவருக்கு துணையாக அவரது கணவர் மாதவனும் களமிறங்கினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தீபா அரசியல் அமைப்பை தொடங்கினார்.

அதிமுக மீட்பேன்
மேலும் அதிமுகவையும் , இரட்டை இலையையும் மீட்பதற்காகவே அரசியல் அமைப்பை தொடங்கியுள்ளதாக தீபா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்த தயாராகினர்.

தினகரனை ஒதுக்கி வையுங்கள்
தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு இணைப்பு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதை ஏற்று தினகரனை ஒதுக்கி வைத்ததாக எடப்பாடி கோஷ்டியினர் அறிவித்தனர். இதனிடையே இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெற்று சென்னை வந்துள்ளார் தினகரன்.

போயஸ் தோட்டத்தில் தீபா
இதனிடையே கடந்த வாரம் தீபா பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அத்தையின் போயஸ் தோட்டம் தனக்கே சொந்தம் என்று கூறி அங்கு அத்துமீறி நுழைந்தார் தீபா. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீபாவை தீபக் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறினார். இதைத் தொடர்ந்து அத்தையின் திராட்சை தோட்டத்தையும், போயஸ் தோட்டத்தையும் தான் மீட்பேன் என்றும் தெரிவித்தார்.

ஜெயானந்த் பேட்டி
இந்தியா டுடேவுக்கு திவாகரனின் மகன் ஜெயனாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தீபா பற்றி பேசுவது அர்த்தமே இல்லை என்று நான் கருதுகிறேன். ஜெயலலிதா உயில் எழுதி வைத்தாரா என்பது குறித்து சசிகலாதான் சொல்வார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர்தான் தீபா.

போயல் தோட்டம்
போயஸ் தோட்டத்துக்கு வந்த தீபாவை யாரும் மிரட்டவில்லை. போயஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எனது அத்தை சசிகலாதான் சொல்லமுடியும் என்றார்.












Click it and Unblock the Notifications