செந்தில் பாலாஜி வீட்டில் நாள் முழுவதும் நடந்த அதிரடி வருமான வரி சோதனை!
கரூர்: சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
ரகசியமாக நடந்த இந்த ரெய்டுக்குப் பிறகே அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தகவலை நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை இந்த சோதனை நடந்தது.
அதேபோல செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் ரகசிய சோதனை நடந்தது. கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலையடுத்து சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த ரெய்டுகளைத் தொடர்ந்தே தேர்தல் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் அரவக்குறிச்சி தொகுதியில் மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து வந்ததாக ஆரம்பத்திலிருந்தே புகார்கள் குவிந்தன. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல வழிகளில் முயன்றும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை. இதனால்தான் வேறு வழியில்லாமல் தேர்தலை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
செந்தில் பாலாஜிக்கும், மேலும் சில அமைச்சர்களுக்கும் நெருக்கமானவராக கூறப்படும் அன்புநாதன் தான் முதலில் இந்த வழக்கில் சிக்கியவர். அவரது கிட்டங்கியில் ரூ. 5 கோடி அளவுக்கு ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.