ஆக்சுவலி.. இது "லேட் மேரேஜ்" பாஸ்.. கூவத்தூரிலேயே நடந்திருக்க வேண்டியது!
வருமான வரித் துறை தற்போது எடுத்த இந்த நடவடிக்கையை அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரிலும், கூர்க்கிலும் தங்கியிருந்தபோது எடுத்திருக்கலாம் என மக்கள் பேசுகின்றனர்.
Recommended Video
சென்னை: சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் தற்போது நடைபெறும் வருமான வரித் துறை சோதனை கூவத்தூரிலும், கூர்க்கிலும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது நடந்திருந்தால் பெரும் பணப்பட்டுவாடாவை தடுத்திருக்க முடியும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இது தற்போது 2ஆவது நாளாக பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.
ஜெயலலிதா என்ற ஆலமரத்தின் நிழலில் இருந்த ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இதனால் தமிழகமே பரபரப்பான நிலையில் உள்ளது.
சொதப்பாமல் எக்ஸிகூஷன்
சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாம். அதை எந்த இடத்திலும் பிசறாமல் நல்ல படியாக செயல்படுத்துவது குறித்தும் உத்தேசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
காரில் ஸ்டிக்கர்
வருமான வரி துறையினர் அரசு வாகனத்தில் வந்தால் தேட வந்தவை அனைத்தும் உஷார்படுத்தப்படும் என்பதால் திருமண கோஷ்டியினர் வேடத்தில் வந்துள்ளனர். சென்னை , கோவை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல 200 கார்களில் சீனி- மகி என்ற ஒரே மாதிரியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு திருமணம் கோஷ்டியினர் போல் சென்றனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் ஆட்டம் கண்டுள்ளனர்.
பணப்பட்டுவாடா
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரு அணிகளாக பிரிந்ததால் முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக ஒரு பஞ்சாயத்தே நடந்தது. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த 122 எம்எல்ஏக்கள் விலை போய்விடுவர் என்ற அச்சத்தால் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு எம்எல்ஏக்கள் பண பேரம் நடைபெற்றது வெளிப்படையாகவே தெரிந்தது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
இதைத் தொடர்ந்து எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோதிலும் சில உள்கட்சி மோதல் காரணமாக 18 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். மேலும் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்ப பெற்றனர். இதனால் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையில் இருந்தது. இந்த 18 பேரும் விலைபோகாமல் இருப்பதற்காக புதுவை விடுதியிலும், கூர்க் விடுதியிலும் சிறு பிள்ளைகள் போல் சீசா விளையாடியும் பீச்சில் மணல் வீடு கட்டியும் தொகுதி பிரச்சினைகளை அலச தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மிகவும் தாமதம்
கூவத்தூரிலும், கூர்க்கிலும் பணம் விளையாடியது கண்கூடாக தெரிந்த போதிலும் வருமான வரித் துறையினர் கண்டும் காணாமல் இருந்தனர். ஆனால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 44 காங். எம்எல்ஏக்கள் கூவத்தூர் பாணியில் பெங்களூரில் தங்கியிருந்தபோது வருமான வரித் துறை "கடமையை" செய்தனர். தற்போது இரு தினங்களாக சசிகலா உறவினர்கள் வீடுகளிலும் கல்யாண கோஷ்டி போர்வையில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கல்யாணத்தை கூவத்தூரிலும், கூர்க்கிலும் நடத்தியிருந்தால் கெட்டு குட்டிச்சுவர் ஆன தமிழகம் தப்பியிருக்குமே ஆபிஸர்.