ஆணிவேர் வரை அசைத்த ஐடி ரெய்டு - சசி குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்
ஐடி ரெய்டு மூலம் சசிகலா சாம்ராஜ்யம் சீட்டுக் கட்டு போல மளமளவென சரிந்து வருகிறது.
சென்னை: ஜெயலலிதா மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சந்தித்த சசிகலாவின் உறவுகள், நட்புகள், பினாமிகள் நேற்று முதல் ஆடித்தான் போயுள்ளனர். காரணம் வருமானவரித்துறை தனது ஆக்டோபஸ் கரங்களால் மொத்தமாக வளைத்து பிடித்து நெருக்கியதுதான்.
ஜெயாடிவியில் ரெய்டு என்று அதிகாலையில் ஊடகங்கள் அலறின. ஆனால் சென்னையில் மட்டுமல்ல தஞ்சாவூர், மன்னார்குடி, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என சசிகலா சாம்ராஜ்யம் ஊடுருவிய ஆணிவேர் வரை அசைத்து பார்த்து விட்டது வருமான வரித்துறை.
ரெய்டு வளையத்தில் சசி உறவினர்கள்
நேற்று அதிகாலை தொடர்ந்த ரெய்டு இன்று 2வது நாளாக நீடிக்கிறது. சசிகலாவின் சகோதரர்கள்,சகோதரி வீடுகள் ரெய்டுக்கு இலக்காகின. போயஸ்கார்டனின் வசித்த சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகன்,மகள்கள், சம்பந்திகள் வீடுகளும் தப்பவில்லை.
ஆபரேசன் கிளீன் பிளாக் மணி
வருமான வரித்துறையினர் 'ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி' என்ற பெயரில் சசிகலா குடும்பத்தை அட்டாக் செய்தனர். எங்களை எதுவும் செய்ய முடியாது என்று தினகரன் பேட்டியில் சொன்னாலும் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தார். காரணம் அவரது ஆணிவேர், சல்லிவேர்களை வருமான வரித்துறையினர் குடைந்து கொண்டிருந்தனர்.
அசைந்த ஆணிவேர்
பினாமிகள், நண்பர்கள், உறவினர்கள் என ஒருவரையும் விடாமல் வளைத்து நடத்திய ரெய்டில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகளின் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர் சிக்கியுள்ளனர்.
பல ஆயிரம் கோடி சொத்துக்கள்
சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் குறி வைத்து 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அட்டாக் இந்தியா முழுவதும் பரபரப்பு செய்தியானர். ஜெயலலிதாவை வைத்து கடந்த 30 ஆண்டுகளாக சம்பாதித்த சசிகலா குடும்பத்தினர் இப்போது பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை டூ மன்னை
சென்னை அண்ணா நகரில் இளவரசியின் மகன் விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இவர் கடந்த ஆண்டுதான் தனது மகளை விவேக்கிற்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த திருமணத்திற்கு செல்லாமல் தவிர்த்தார் ஜெயலலிதா. மன்னார்குடியில் திவாகரனின் வீடு, கல்லூரியில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது.
அதிர்ச்சியில் சசிகலா குடும்பம்
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை சசிகலா குடும்பத்தை யாரும் நெருங்க கூட முடியவில்லை. ஜெயலலிதா என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் அனைவரும் இருந்தனர். ஜெயலலிதா இறந்து ஓராண்டு கூட முடிவடையவில்லை. இப்போது தாங்கள் செய்த பாவத்திற்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர் சசிகலா குடும்பத்தினர்.
துல்லிய தாக்குதல்
தமிழகத்தில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கும் சசிகலா குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு ஆசால்ட் என்கிறார் டிடிவி தினகரன். என்னதான் நடக்கும் என்று கவனமாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.