விழுப்புரம்: அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டில் அதிரடி சோதனை - ரூ. 1.50 கோடி பணம் பறிமுதல்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் அதிமுக, திமுக நிர்வாகிகள் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறைக்கு ரகசிய தகவல்கள் வருகின்றன. இதையொட்டி அவர்கள் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அ.தி.மு.க., தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை வருமான வரி அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
இதையொட்டி சென்னை வருமானவரி அலுவலர் ஸ்வாரப்மன்னவா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று விக்கிரவாண்டியில் உள்ள 5 வீடுகளில் சோதனையை தொடங்கினர்.
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. பிரமுகர் முரளிதரன் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர். வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மதியம் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியே வந்தனர். அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடியே 30 லட்சத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
விக்கிரவாண்டி மெயின் ரோட்டில் அரிசி ஆலை உரிமையாளர் பசீர் அகமது வீடு உள்ளது. இவரது வீட்டிலும் விடிய விடிய சோதனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு அதிகாரிகள் சோதனையை முடித்து கொண்டு வெளியே வந்தனர். அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
இதேபோல் விக்கிரவாண்டி பழைய தபால் நிலையம் தெருவில் உள்ள பாஸ்கர், தி.மு.க. பிரமுகரும், முத்திரை தாள் விற்பனையாளருமான சந்தானம், தனியார் சர்க்கரை ஆலை அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த வீடுகளிலும் விடிய விடிய சோதனை நடைபெற்றது. இதில் ஆவணமோ, பணமோ சிக்கவில்லை.
விக்கிரவாண்டி பகுதியில் ஒரே நாளில் 5 வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடந்த வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications