ஜல்லிக்கட்டுக்கு தடை: மதுரை ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த அலங்காநல்லூர் மக்கள்
மதுரை: ஜல்லிக்கட்டு தடையை திரும்ப பெறக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய ஆட்சியர் சுப்ரமணியன், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்கள் அவசரப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியமான பெடா, உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதித்தது. அதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தேர்தலை புறக்கணிக்க அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்ததை எதிர்த்து அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக அவர்கள் பேரணியாக சென்றனர். அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் நூற்றுக்கணக்காகனார் மதுரையில் பேரணி சென்றனர். இதற்கென அப்பகுதியினர் பல வாகனங்களில் காந்தி மியூசியத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அலங்காநல்லூர்வாசிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெடா அமைப்புக்கு தடை கோரியும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த மக்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என உறுதி கூறினார். தற்போது ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை மட்டுமே விதிக்கப்பட்டள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட ஆட்சியர், மக்கள் அவசரப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications