புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 1028 காளைகள் - மாடுகள் முட்டி 16 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே தொண்டைமான் நல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 1028 காளைகள் சீறிப்பாய்ந்தன.
புதுக்கோட்டை: கீனூர் அருகே தொண்டைமான் நல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1028 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை சுகாதாரதுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் மாடு முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தொண்டைமான் நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த ஒரு வாரமாக கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் வாடிவாசலை பார்வையிட்ட வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கினர்.
இதை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக 248 மாடுபிடி வீரர்களை போலீசார், மருத்துவர்கள் உரிய முறையில் சோதனை செய்த பிறகு அனுமதித்தினர்.
ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,028 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளி பாய்ந்து ஓடியது. மாடுகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.