ஏற்கனவே வந்தவர்களே இன்னும் இருட்டில்... இப்ப வந்த இனியன் சம்பத்துக்கு எப்ப கிடைக்கும் ஒளி..?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தம்பி இனியன் சம்பத் உள்பட ஆயிரக்கணக்கானோர் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். நீங்கள் நம்பி வந்த இடம் ரொம்ப நல்ல இடம், உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் உள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே இவரை நம்பி வந்த அதிருப்தி தேமுதிகவினர் இன்று ஆள் அட்ரஸே இல்லாமல் இருட்டிலேயே இருப்பது சற்று குழப்பமாகத்தான் உள்ளது.
அவர்களும் இன்று சேர்ந்தவர்களைப் போல இது ரொம்ப நல்ல இடம் என்று நம்பி வந்தவர்கள்தான். நம்பி வந்த இடத்திற்காக, ஏற்கனவே இருந்த தேமுதிகவுக்கு எதிராக தீவிரமாகவும் பணியாற்றி வந்தனர். ஆனால் இன்று வரை அவர்களுக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றி வைக்கவில்லை அதிமுக.
எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. வாரியத் தலைவர் பதவி கூட இன்னும் தரப்படாமல் உள்ளனர்.
இளங்கோவன் தம்பி இனியன் சம்பத்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தம்பி இனியன் சம்பத் உள்பட இன்று அதிமுகவில் கிட்டத்தட்ட 12,000 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டனர். அவர்களை வாழ்த்தி வரவேற்றார் ஜெயலலிதா.
நம்பி வந்த இடம் நல்ல இடம்
நிகழ்ச்சியில் ஜெயலலிதா உற்சாகமாகப் பேசினார். அவர் பேசுகையில், நீங்கள் வந்த இடம் நல்ல இடம், நீங்கள் நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்கள் அனைவருக்கும் அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்றார்.
இடிக்குதே!
இப்படிப் பேசிய ஜெயலலிதாவின் பேச்சு கூடியிருந்தவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் ஜெயலலிதா சொன்னது போல இவர்களுக்கெல்லாம் உடனடியாக ஒளிமயம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம், ஏற்கனவே ஜெயலலிதாவை நம்பி வந்த பலர் இன்னும் இருட்டில் இருப்பதால்.!
9 தேமுதிக எம்.எல்.ஏக்கள்
கடந்த சட்டசபையில் தேமுதிக சார்பில் உறுப்பினர்களாக இருந்த 9 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர். இவர்களில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ பதவியை உதறி விட்டு அதிமுகவில் சேர்ந்து கொண்டார். மற்றவர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு சற்று முன்னதாக அதிமுகவில் முறைப்படி இணைந்தனர். இவர்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்ததால் விஜயகாந்த்திடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனது.
யார் யார்?
மு.அருண் சுப்பிரமணியன் (திருத்தணி), செ.அருண்பாண்டியன் (பேராவூரணி), ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்), ஆர்.சுந்தரராஜன் (மதுரை மத்திய தொகுதி), டி.சுரேஷ்குமார் (செங்கம்), க.தமிழழகன் (திட்டக்குடி), க.பாண்டியராஜன் (விருதுநகர்), சி.மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்). இவர்கள் தவிர பாமக-வைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.
பாண்டியராஜனைத் தவிர மற்றவர்களுக்கு அல்வா
இதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், மாபா பாண்டியராஜனுக்கும் மட்டுமே ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுத்தார். மற்றவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் அத்தனை பேரும் அம்போவென கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர். தேர்தலில் பண்ருட்டியார் தோற்றார். பாண்டியராஜன் மட்டுமே வென்றார்.
இப்ப வந்தவங்களுக்கு எப்போது கிடைக்குமோ ஒளி...!
இப்படி நல்ல இடம் என்று ஏற்கனவே நம்பி வந்த பலர் இன்னும் இருட்டிலேயே உள்ள நிலையில் இனியன் சம்பத் உள்ளிட்டவர்களுக்கு ஒளி எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை..!!
பொறுத்திருந்து பார்ப்போம்.