லோக்சபா தேர்தல்: ஓ.பி.எஸ். உட்பட 3 அமைச்சர்களின் உறவினர்களுக்கு சீட் தர மறுத்த ஜெ.!
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா நேற்று வெளியிட்டிருந்தார். அதில் 37 பேர் புதுமுகங்கள். 3 பேர் சிட்டிங் எம்.பிக்கள்.
ஓ.பி.எஸ். மகன்
இந்த புதுமுகங்களில் எவரும் அரசியல் வாரிசுகளோ, தற்போதைய அமைச்சர்களின் உறவினர்களோ இல்லை. அதிமுகவில் ஓராண்டுக்கும் மேலாக தேனி லோக்சபா தொகுதியை தமது மகன் ரவீந்திரநாத்குமாருக்காக குறிவைத்து காய் நகர்த்தி வந்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் நேற்றைய வேட்பாளர் பட்டியலில் தேனியில் பார்த்திபன் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
"நத்தம்" மைத்துனர் கண்ணன்
இதேபோல் திண்டுக்கல் லோக்சபா தொகுதியை தமது மைத்துனர் கண்ணனுக்காக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறிவைத்திருந்தார். நத்தம் தொகுதி அதிமுக செயலாளராக இருந்தபோதும், மாவட்டம் முழுவதும் அமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கண்ணனும் பங்கேற்று வந்தார். எப்படியும் எம்.பி. ஆகிவிடுவோம் என்ற கோதாவில் மூத்த நிர்வாகிகளையும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார் கண்ணன்.
தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனராம் . திண்டுக்கல் தொகுதியில் நிலக்கோட்டை உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தமது அக்கா மகனுக்காக மதுரை தொகுதியை குறிவைத்திருந்தார். ஆனால் மதுரை துணைமேயர் கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஓராண்டுக்கும் மேலாக காய் நகர்த்தியும் 'வடை போச்சே' என்கிற வகையில் பெருத்த ஏமாற்றத்துடன் இருக்கின்றனராம் இந்த மூன்று அமைச்சர்களும்!