ரோசய்யாவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு: அமைச்சரவை மாற்றம் என்று பரவிய வதந்தியால் பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை 4.30 மணிக்கு ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஜெயலலிதா மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வறிக்கையை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் கே.ரோசய்யாவை அவ்வப்போது சந்தித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைப்பது வழக்கம். அந்த அடிப்படையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எடுத்துரைத்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கவர்னர் மாளிக்கைக்கு சென்றது அமைச்சரவை மாற்றம் குறித்து பேச என்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.