ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் சோதனை வெறும் கண்டுதுடைப்பே: ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தது வெறும் கண்துடைப்பு என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இது பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கான பெருத்த கண்டனக் குரல்களும் வந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் வியாபாரம் மிக மோசமான நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறது, யாரும் பணத்தை கையில் எடுத்துக் கொண்டு பொருட்களை வாங்குவதற்காக வரவில்லை என்று வியாபாரிகள் ஆங்காங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் "அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்களின் வாகனங்களை சோதனை செய்கிறீர்களா?" என்ற கேள்வியினை வாகன சோதனை செய்யும் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. மக்களின் வாகனங்களை சோதனை செய்யும் அதிகாரிகள் மக்களுக்கு பதில் கூறும் விதமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள்.
அதே போல், முதலமைச்சரின் வாகனத்தை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களின் ஹெலிகாப்டரை நேற்று சோதனை செய்திருக்கிறார்கள். ஆனால் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி தான் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்றவுடன், ஹெலிபேட்டில் நின்று கொண்டிருக்கின்ற ஹெலிகாப்டரை சோதனை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை? சோதனை செய்வோர்கள் வாகனம் சாலையில் வரும்போதும், வாகன ஓட்டுனர் மற்றும் வாகனத்தில் அமர்ந்திருப்போர் இருக்கும்போதும், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.
முதல்வரின் ஹெலிகாப்டர் ஹெலிபேடுக்கு வந்தவுடன், முதலமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு செல்லுவதற்கு முன் அமர்ந்திருக்கும் போதே உள்ளே ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை செய்திருந்தால் இச்சோதனை முழு மனதாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் மேடைக்கு சென்றவுடன் காலியாக இருக்கும் ஹெலிகாப்டரை சோதனை செய்வது தேர்தல் ஆணையம் தனது விளம்பரத்திற்காக நடத்திய சோதனை என்று பரவலாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தேர்தல் ஆணையமாக இருந்தாலும், பறக்கும் படையினராக இருந்தாலும் பொதுவாக வியாபாரிகள் மத்தியிலே இந்த ஐயப்பாடுகளை நீக்குகிற விதம் தேர்தலுக்காக அரசியல் கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் மட்டும் சோதனை செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டும், பொதுமக்களின் வாகங்களை சோதனை செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொண்டும், அரசியலில் யார் யார் இருக்கிறார்கள், யாரெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள், வாகனத்தில் வாக்கு சேகரிக்கிறார்கள் என்று கண்டு கொண்டு சோதனை நடத்தினால் உண்மையிலே வரவேற்க வேண்டிய விஷயம். அதை விட்டுவிட்டு பாவம் பொதுமக்கள் கல்யாணத்திற்கும், பல சம்பவங்களுக்கும், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் கையிலே காசு எடுத்துக் கொண்டு போய் வாங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியிருப்பது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், வியாபாரிகளும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது மிகவும் வருந்தத்தக்க விஷயம், பல பேர் என்னிடம் முறையிட்டிருப்பதன் காரணத்தால் இதை நான் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் நேற்றைய வாகன சோதனை கண்துடைப்பாக தான் தெரிகிறது. இது உண்மையாக சோதனையாக மக்கள் பார்வையில் படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications