கலாம் நினைவு நாள் விழாவிலும் "அம்மா புராணம்" பாடி முகம் சுளிக்க வைத்த அமைச்சர்கள்!
ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் நினைவு நாள் விழாவில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் மணிகண்டன், நிலோபர் கஃபில் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை பாடி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தனர்.
மக்கள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இன்று அவரது நினைவிடத்தில் முழு உருவ வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.
குடியரசுத் தலைவராக இருந்தபோது திருவள்ளுவர் சிலையை ஜனாதிபதி மாளிகையில் நிறுவியர் கலாம் என்றும் சாதி, மதம், மொழியை கடந்த அனைவரும் நாட்டுக்காக உழைக்கவேண்டும் என்றவர் கலாம் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும் ஏழ்மையில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அப்துல் காலம் எனவும் பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். கலாம் தேசிய நினைவாகப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் எனவும் பொன்.ராதா உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் மணிகண்டன்
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசிய போது, ராமேஸ்வரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்து சக்தியாக விளங்கினார்.
கலாமுக்கு புகழாரம்
ஏவுகணை உருவாக்கம், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்த போதிலும், போலியோ பாதித்தவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மன நிறைவு கண்டவர் அப்துல் கலாம்.
அம்மா புராணம்
அப்துல் கலாம் அவர்களது நல்லடக்கம் செய்யப்படுவதற்காக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அரசு நிலத்தை ஒதுக்கி கொடுத்தார். அப்துல் கலாம் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15ம் நாள் இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க உத்தரவிட்ட அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
அமைச்சர் நிலோபர் கஃபில்
இதேபோல விழாவில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில் பேசிய போது, அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றினை பேசினார். தொடர்ந்து அவர், அப்துல் கலாம் முதல் முறையாக ஜனாதிபதியாவதற்கு முதல்வர் ஜெயலலிதா அரும்பாடு பட்டார். அவருடைய ஒருங்கிணைப்பினால் அப்துல் கலாம் ஜனாதிபதியானர் என்று கூறினார்.
அரசியல் விழாவா?
இரண்டாவது முறையாக அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக முன்னிறுத்தப்பட்ட போது தமிழகத்தில் இருந்த ஒரு முக்கியத் தலைவர் முட்டுக்கட்டை போட்டார் என்பது இங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார் நிலோபர் கஃபில்.
அம்மா புகழ் பாடலாமா?
அப்துல் கலாம் நினைவு நாள் விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர். அதே போல தமிழக அமைச்சர்கள் சட்டசபையில் பேசுவது போல அனிச்சை செயலாக அம்மா புராணம் பாடி பலரையும் முகம் சுளிக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.