ரூ.182.38 கோடி அரசு கட்டிடங்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்த ஜெயலலிதா
சென்னை: ரூ. 182 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, காஞ்சீபுரம், விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 47 கோடியே 97 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 கிடங்குகள்;
அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் வகையில், விவசாய விளைபொருட்களைச் சேமித்து அதன்மீது தானிய ஈட்டுக்கடன் பெறவும், நல்ல விலை கிடைக்கும் பொழுது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்று அதிக லாபம் ஈட்டவும் வழிகோலும் வகையிலும் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 113 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 884 சேமிப்பு கிடங்குகள்;
நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் செயல்பட்டுவரும் நகரக்கூட்டுறவு வங்கிகள், நகரக்கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வணிக வங்கிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த சேவையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் 3 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட 8 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 36 கிளைகள்; 1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட 12 நகரக்கூட்டுறவு வங்கிகள்;
91 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட 10 நகரக்கூட்டுறவு கடன் சங்கங்கள்; 4 கோடியே 78 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட 69 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்;
காஞ்சீபுரம்-செவிலிமேடு, தர்மபுரி- காரிமங்கலம், பரமக்குடி ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் 3 கிளைகளுக்கு 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடங்கள்;
விவசாய பெருமக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே அவர்களுக்கு தேவையான வங்கி சேவைகளை அளிக்கும் வகையில் கடலூர்- வேப்பூர் மற்றும் அண்ணாமலை நகர், ஈரோடு- சோலார், நீலகிரி- தேவர்சோலை, ராமநாதபுரம்- அபிராமம், விருதுநகர் - பரளச்சி மற்றும் கிருஷ்ணன்கோவில் ஆகிய இடங்களில் 39 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 7 கிளைகள்;
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகை கடன்களுக்காக பெறப்படும் நகைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தஞ்சாவூர்- பாபநாசம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு, ஈரோடு, பெருந்துறை மற்றும் பவானி, பரமக்குடி மற்றும் திருவாடனை, திருவாரூர் ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 54 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள்;
திருச்சிராப்பள்ளி- துறையூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 மெட்ரிக் டன் கணினி எடை மேடை;
வேளாண் பொருள்களைப் பதப்படுத்தி மதிப்பினைக் கூட்டி விற்பனை செய்து கூட்டுறவு சங்கங்கள் அதிக லாபம் ஈட்டிடும் வகையில் மதுரை- பேரையூர் மற்றும் திருமங்கலம், சிதம்பரம், பெருந்துறை, திருச்செங்கோடு ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் 91 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதனிடும் அலகுகள்;
கிராமப்புற மக்களின் விலையுயர்ந்த நகைகள், வீட்டுமனை ஆவணம், நிலப்பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திடும் வகையில் நாமக்கல், தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 72 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டகங்கள்;
ஆரணி, பெரியகுளம், சக்கம்பட்டி, சங்கனூர், பாப்பநாயக்கன்புதூர் ஆகிய கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு 1 கோடியே 10 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடத்துடன் கூடிய சில்லரை விற்பனை பிரிவுகள்;
சில்லரை வணிகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக கூட்டுறவு பண்டகசாலைகள் புதுப்பொலிவுடன் திகழ்ந்திட பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட சுயசேவை பிரிவு;
ஈரோட்டில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம்;
ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின்கீழ் கரூர்- சேங்கல் மற்றும் பஞ்சப்பட்டி, வேலூர்- எஸ்.மோட்டூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் 43 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்குகள்;
திண்டுக்கல்- இடையகோட்டை, ராணிப்பேட்டை, போளிப்பாக்கம் மற்றும் குடியாத்தம், பாரப்பட்டி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 56 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள்;
என மொத்தம் 182 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.