மத்திய அரசின் மனுவால் தமிழக மக்கள் ஷாக்... ஜெயக்குமார் கவலை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவால் தமிழக மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவால் தமிழக மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கோரிக்கைக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது : காவிரி இறுதித் தீர்ப்பின் படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே உச்சநீதிமன்றம் சொன்னது. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாததால் மத்திய அரசு மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர், மத்திய கேபினட் செயலாளர் என இருவர் மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் வரை நீதிமன்ற அவமதிப்பு தொடரும் என்று தான் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலமும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவில்லை.

முதலில் அவமதிப்பு வழக்கு
புதுச்சேரி அரசு கூட அவமதிப்பு வழக்கு போடுவோம் என்று தான் சொன்னதே தவிர அவர்கள் போடவில்லை, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி முதலில் தமிழக அரசு தான் உச்சநீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.

அதிர்ச்சியில் தமிழக மக்கள்
இதற்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விஷயம், நாம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற திருப்பில் தெளிவாக 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இருக்கிறது. அப்படி இருக்கும் போது 3 மாத அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்
மத்திய அரசின் மனு தமிழக மக்களுக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது. முடிந்த அளவிற்கு அதிமுக அரசு மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மனு மீது எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழக விவசாயிகள் உணர்வுப்பூர்வமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள், அந்த உணர்வு மத்திய அரசுக்கு தெரியவில்லையா. கர்நாடக மக்களை விட அதிக பாதிப்பு தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெளிவாக முன்வைக்கும்.

ஜெயக்குமார் மழுப்பல்
மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் சொன்னார். இறுதித் தீர்ப்பை கொடுத்தது உச்சநீதிமன்றம் எனவே நாம் கேள்வி கேட்க வேண்டிய இடமும் உச்சநீதிமன்றமே. இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் நாம் கேட்க வேண்டியதில்லை.

நியாயம் கிடைக்கும்
சட்டப்படி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதை நாம் நீதிமன்றத்திலேயே முறையிடுவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது என்றால் அதை நாம் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும். உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் நமக்கு நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications