ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு.. பரபரப்பைக் கிளப்பிய அப்பல்லோவின் 12வது அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்பதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து தொடர் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. இதுவரை 11 அறிக்கைகள் வெளியிடப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பலமுறை சென்னை வந்து தீவிர சிகிச்சை அளித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் வந்தும் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் உடல்நிலை பூரண குணமடைந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அதன் 12வது அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.