இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் கமிஷனுக்கு மனு கொடுத்தவருக்கு சீட் கொடுத்த ஜெ.
திருப்பூர்: மடத்துக்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளராக, ஜெலலிதாவால் அறிவிக்கப்பட்டுள்ள அந்த தொகுதி செயலாளர் மனோகரன் இந்திய தேர்தல் கமிஷனிடம், இரட்டை இலை சின்னத்தை முடக்க, கடிதம் எழுதி கொடுத்தவர் என்பது சுவாரசியம்.
மனோகரன் மீது அதிமுகவினர் நீண்ட புகார் பட்டியலை வாசிக்கிறார்கள். அதிமுகவில் இருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டபோது, அவரோடு சேர்த்து நீக்கப்பட்டவர் இந்த மனோகரன். இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தன் கைப்பட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுத்தவராம் இவர்.
அரசு வக்கீலாக பதவியில் இருந்தபோதே, உடுமலைபேட்டையில் ஆளும் கட்சியையும், அரசையும் எதிர்த்து, பஸ் மறியல் செய்து, பொது சொத்துக்களுக்கு சேதம் செய்ததால், அன்றைய மாவட்ட கலெக்டரால், தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டவர்தான் இவர்.
பொள்ளாச்சி தொகுதி லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
கட்சி பத்திரிகையை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தது, கட்சி பத்திரிகைக்கு ஆயுள் சந்தா வசூல் செய்து அந்த பணத்தை அவரே வைத்துக் கொண்டார் என்று இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகளை அதிமுக நிர்வாகிகள் பட்டியலிட்டு அதை மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோகரனை மேலிடம் மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் அவர் ஆதரவு நிர்வாகிகள்.