ஜெ., உடல்நிலை பாதிப்புக்கு ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் காரணம் ? பக்ஷி சிவராஜன் 'பகீர்'
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போனதற்குக் காரணம் ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்தை யுத்த நாளில் குறித்ததுதான் என்று என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில்கள், திருமடங்கள் பாதுகாப்புப் பிரிவின் மாநில அமைப்பாளரும் ஜோதிடர் பக்ஷி சிவராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற மூன்று வகை பெருமை பெற்ற ராமேஸ்வரம் ராமாயண காவியத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. சிவபக்தனான ராவணனை வதம் செய்ததால் ராமனைப் பிடித்த பிரம்ம ஹத்திதோஷம் நீங்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சீதை மணலால் செய்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் கோவில்
ராமன் வழிபட்ட சிவபெருமான் என்பதால் இங்குள்ள சிவபெருமானுக்கு ராமநாதசுவாமி என்று பெயர் விளங்கலாயிற்று. பஞ்ச பூதங்களில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் என்பதாலும் ராமன் வணங்கிய ஈசன் என்பதாலும் இந்த இடம் ராமேஸ்வரம் என பெயர் விளங்கலாயிற்று. ராமாயண காவிய காலத்திற்கு முன்பிருந்த கோயில் என்பதால் இந்தக் கோயில் தோன்றிய காலம் கணக்கிடப்பட முடியவில்லை.
புனித தலம்
காசிக்கு இணையான தீர்த்த ஸ்தலமாக விளங்குவதால் காசி யாத்திரை ராமேஸ்வரம் வந்தபின்பே பூர்த்தியடையும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்திற்கு தினமும் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பெருமை பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் கருவறை இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவினால் கட்டப்பட்டது. சேதுபதி மன்னர்கள் ராமநாதசுவாமியை தங்கள் குலதெய்வமாகக் கொண்டதை அடுத்து உலகில் மிகப்பெரிய மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது.
ஜனவரியில் கும்பாபிஷேகம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்பது ஆகம விதிகளுள் ஒன்று. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2013 ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. மொட்டைக் கோபுரங்களாக இருந்த வடக்கு,தெற்குகோபுரங்கள் புதிதாக கட்டும் திருப்பணிகளால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யுத்தநாளில் நாள் குறிப்பு
ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.
போதாயன அமாவாசை தினத்தில் யுத்தம் செய்வதற்கான நாளை மட்டுமே இந்த நாளில் குறிப்பார்களாம். கும்ப லக்கனத்தில் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்திருந்தனர். அந்த நாளில் கும்ப லக்கனத்தில் கேது இருந்தது. அன்றைய தினம் கும்பாபிஷேகம் நடந்தால் கும்பாபிஷேகம் நடத்தக் கூடிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் எஜமானின் உயிருக்குக் கேடு ஏற்படுத்தும் என ஜோதிடர்களும் இந்து அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர்.
7 கோடி பிணங்கள் விழும்
இது குறித்து கருத்து கூறிய ஜோதிடர் பக்ஷி சிவராஜன், சரஸ்வதி மஹால் வெளியிட்ட ஆய்வு நூலான 'கால விதான பத்தி'யில் குரு அதிசாரவக்கிரத்தில் இருந்தால் 7 கோடி பிணங்கள் விழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிடும் ராஷ்ட்ரீய பஞ்சாங்கத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நாளில் கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டு மக்களுக்கும், அவர்களின் தலைமை கர்த்தாவாக இருப்பவருக்கும் சங்கடங்கள் நேரும் என்பதால் அந்த நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தக் கூடாது என அறநிலையத் துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினேன். அவர் கண்டு கொள்ளவில்லை.
ஜெயலலிதா உடல்நிலை
இதையடுத்து கும்பாபிஷேகத்துக்குத் தடைகோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்குத் தொடர்ந்தேன். நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே குறிக்கப்பட்டது போல ஜனவரி 20ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கிரக அமைப்புக்கு எதிரான நாளில் ராமேஸ்வரம் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தியதன் விளைவே முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
பரிகார பூஜை
முதல்வர் பூரண நலம் பெற்று தற்போதைய சிக்கலில் இருந்து மீண்டு வர பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். மேலும் பரிகார கும்பாபிஷேகம் எனக் கூறப்படும் அந்தரித கும்பாபிஷேகம் ராமேஸ்வரம் கோயிலில் நடத்துவதுடன், தவறான நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்த சுயநலம் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் பக்ஷி சிவராஜன் கூறியுள்ளார்.
புனிதப்படுத்தி கும்பாபிஷேகம்
அந்தரிதம் என்பது புனிதம் இழந்த கோவில்களை புனிதப்படுத்தும் விதமாக கும்பாபிஷேகம் செய்வதாகும். யுத்தநாளில் கும்பாபிஷேகம் செய்ய முகூர்த்தக்கால் ஊன்றியதே ஜெயலலிதாவின் தற்போதய நிலைக்கு காரணம் என்று கூறும் ஜோதிடர் பக்ஷி சிவராஜன், ராமேஸ்வரம் ஆலயத்தினை மீண்டும் புனிதப்படுத்தும் வகையில் அந்தரிதம் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்?