போயஸ் கார்டனா, கோடநாடா.. டிஸ்சார்ஜ்ஜுக்கு பிறகு ஜெயலலிதா எங்கே செல்வார்?
சென்னை: ஒரு வழியாக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகப்போவதாக குறைந்தபட்சம் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களாவது கசியத் தொடங்கியுள்ளது இதுதான் முதல் முறை.
செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை, ஆயிரம் விளக்கு, அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்ந்த பிறகு இப்போதுதான் டிஸ்சார்ஜ் பற்றிய பேச்சுக்கள் முனுமுனுப்பாகவாவது முதல் முறையாக வெளியே வருகின்றன.
தங்கள் தலைவியின் வருகையை வழி மீது விழி வைத்து ஆர்வமோடு உற்று நோக்கி கொண்டு உள்ளனர், அதிமுகவின் பல லட்சம் ரத்தத்தின் ரத்தங்கள்.

எங்கே செல்வார்
இப்போது எல்லோர் முன்பும் உள்ள கேள்வி, ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறாரா, அல்லது தனி வார்டுக்கு மாற்றப்படுகிறாரா என்பது. அடுத்த கேள்வி, அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு, போயஸ் கார்டன் செல்வாரா அல்லது கோடநாடு எஸ்டேட் செல்வாரா என்பதுதான். இதுகுறித்து மருத்துவர்கள், அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தபோது, அவர்கள் கூறிய தகவல், ஜெயலலிதா கண்டிப்பாக போயஸ் கார்டனில்தான் இருப்பார் என்பதுதான்.

மருத்துவ காரணம்
மருத்துவர்கள் கூறும் முதல் காரணம், ஜெயலலிதாவுக்கு இருக்கும் நுரையீரல் நோய் தொற்று தொடர்பானது. தற்போது குளிர்காலம் ஆரம்பித்து வருகிறது. கோத்தகிரி அருகேயுள்ள மலைப்பாங்கான கோடநாட்டுக்கு அவர் சென்றால் அந்த தட்பவெப்பம் ஜெயலலிதாவுக்கு ஒத்துக்கொள்ளாது என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.

அவசர உதவிக்கு அவசியம்
மேலும், ஜெயலலிதா சுமார் 2 மாதங்களாக மருத்துவமனையின் ஐசியூவிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருபவர். அவரது உடல் நலனத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். இதற்காக அவர் சென்னையில் இருப்பதுதான் பல வகைகளிலும் உதவியாக இருக்கும். அவசர மருத்துவ உதவிகளை சென்னையில் மேற்கொள்வதை போல கோடநாட்டில் பெற முடியாது.

ஆட்சி நிர்வாகம்
அதேபோல அதிமுக நிர்வாகிகள் கூறும் கருத்தும் ஜெயலலிதா கார்டனில் இருப்பார் என்பதுதான். இத்தனை நாட்களாக கட்சி மற்றும் ஆட்சிக்குள் என்னவெல்லாம் நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க அவர் கார்டனில் இருக்கவே ஆசைப்படுவார் என அடித்துக்கூறுகிறார்கள் அவர்கள்.












Click it and Unblock the Notifications