அதிருப்தியை சமாளிக்க அதிரடி.. பிரிட்ஜ், வாஷிங்மெஷின் இலவசம்.. தயாராகிறது அதிமுக தேர்தல் அறிக்கை
சென்னை: பிரச்சாரம் எடுபடாமல் போயுள்ள நிலையில், இலவச பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அறிவிப்புகளோடு முழுக்க கவர்ச்சிகரமான திட்டங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு, அதை முன்வைத்து வாக்கு வேட்டையாடிவருகின்றன.
ஆளும் கட்சியான அதிமுக ஆளுக்கு முன்பாக வேட்பாளர்களை அறிவித்தபோதிலும், தேர்தல் வாக்குறுதியை அளிப்பதில் மட்டும் காலதாமதம் ஆகிவருகிறது.
மாஸ்டர் பிளான்
அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்துவருவதன் பின்னணியில், பெரிய மாஸ்டர் பிளான் இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஹீரோ
2006ம் ஆண்டு தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோ என வர்ணிக்கப்பட்டது. காரணம், அப்போதுதான் இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பெரும் விவாதப்பொருளாக மாறி மக்களை ஈர்த்தன. இலவச கலர் டிவி அளிப்பதாக வாக்குறுதி தந்தது அப்போதுதான்.
இலவசம்
இதையடுத்து 2011ல் ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை கையில் எடுத்தார். இலவச லேப்-டாப் வழங்குவதாக அவர் அறிவித்தது அந்த தேர்தலில் மக்களை ஈர்த்தது. இவ்விரு அரசுகளுமே முடிந்த அளவுக்கு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, இலவசங்கள் மக்களை சென்று சேருவதை உறுதி செய்து கொண்டனர்.
திமுக மீது எதிர்பார்ப்பு
இந்நிலையில், தற்போதைய தேர்தல் அறிக்கையில் திமுக மேலும் பல அதிரடி இலவச திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதற்காகத்தான் இலவசங்களை ஏளனமாக பார்க்க வேண்டியதில்லை, அவையும் நல திட்டங்கள்தான் என சப்பைகட்டு கட்டி வந்தது அக்கட்சி.
இளைஞர்கள் கோபம்
ஆனால், புதிய இளம் வாக்காளர்கள் இலவசங்களை, தங்களது சுய மதிப்பை குலைக்கும் அறிவிப்புகளாகவே பார்க்கின்றனர். இது சோஷியல் மீடியாக்களிலும் எதிரொலித்தது. எனவே திமுக இம்முறை, தனது தேர்தல் அறிக்கையில நேரடி இலவச திட்டங்களை தவிர்த்துவிட்டது.
அதிமுக மகிழ்ச்சி
இந்த தேர்தல் அறிக்கை யாருக்கு மகிழ்ச்சியை தந்திருக்குமோ இல்லையோ, அதிமுக தலைமைக்கு குஷியை கொடுத்துள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி பெரும்பாலும் அடித்தட்டு மக்களை சார்ந்தது. எனவே அவர்களை ஈர்க்க இலவசங்கள் பெரிதும் உதவும்.
பிரசாரம் டல்
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம், ஒரே மாதிரியானதாக இருப்பதால் மக்களை கவரவில்லை. அவரது கூட்டத்தில் அவ்வப்போது வெயில் கொடுமையால் உயிரிழப்புகளும் ஏற்படுவது நெகட்டிவ் தோற்றத்தை கொடுத்துள்ளது.
அதிரடி இலவசங்கள்
ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் இயல்பாக மக்களிடம் தோன்றும் அதிருப்தி, திமுகவின் எழுச்சி போன்றவற்றை சமாளிக்க ஜெயலலிதா கையில் எடுக்கப்போகும் ஆயுதம்தான் இலவசங்கள். 'முதலில் பிரிட்ஜ் மட்டும் தருவதாக இருந்தது. இப்போது கூட்டம் டல் அடிப்பதை பார்த்து வாஷிங்மெஷினும் தர உள்ளார்' என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
புரிந்து கொண்ட கருணாநிதி
ஜெயலலிதாவின் அதிரடி ஆயுதம் குறித்து முன்கூட்டியே கருணாநிதியும் அறிந்து கொண்டுள்ளார். நேற்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் அவரது பதற்றம் தெரிந்தது. "ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் மாயாஜாலம் செய்ய முயலுகிறார். மக்கள் அவரது வாக்குறுதியை நம்ப மாட்டார்கள்" என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இனிதான் சூடுபிடிக்கும்
இந்த தேர்தல் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வந்த பிறகுதான் உண்மையாகவே சூடு பிடிக்க போகிறது என்று ஆரூடம் கூறுகிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள். இன்னும் சில நாட்களில் அதிரடி அறிக்கை ரிலீசாக போகிறதாம். பொறுத்திருந்து பார்ப்போம்.