ஜெ.வின் மர்ம மரணம்... எத்தனை எத்தனை மர்மங்கள்.. எங்கே போயின விடைகள் ?
ஜெயலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டபடி உள்ளனர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதனை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மார்ச் 8ஆம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்களிடத்திலும் பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெ. மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தொண்டர் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.
நடிகை கவுதமி எழுப்பிய சந்தேகம்
ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கும் சந்தேகம் உள்ளது. அவர் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தபப்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கவுதமி கடிதம் எழுதினார். ஜெயலலிதா இறந்தபின், அவரது பூத உடல் ராஜாஜி மஹாலில் டிசம்பர் 6ஆம் தேதி வைக்கப்பட்டிருந்தபோது அஞ்சலி செலுத்த வந்த கவுதமி, செய்தியாளர்களிடம் பேச முடியாமல் அழுதது நினைவிருக்கலாம்.
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜெ.மரணத்தில் மர்மம் உள்ளது என தொலைக்காட்சிகளுக்கு பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் நெடுநாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என 15க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களின் சந்தேகம்
அந்தவகையில் மக்கள் எழுப்பும் சில சந்தேகங்களை பார்ப்போம். ஜெயலலிதா ராமச்சந்திரா மருத்துவமனையில்தான் வழக்கமான செக்-அப்புகளை செய்துகொள்வார். அப்படியிருக்கும்போது, ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த காரணம் என்ன?
தீர்மானித்தது யார்
அப்பல்லோ மருத்துவமனைதான் போயஸ் இல்லத்திலிருந்து அருகில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், ராமசந்திரா மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று காவல்துறையிடம் கூறியிருந்தால் அவர்கள் போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கமாட்டார்களா? அப்பல்லோ மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என யார் தீர்மானித்தார்கள்?
சிவக்குமார் எங்கே
ஜெயலலிதாவுக்கு வீட்டில் மருத்துவம் அளித்தது சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் டாக்டர் சிவக்குமார். ஆனால், அண்மையில் லண்டன் மருத்துவர் பீலே சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது சிவக்குமார் ஏன் உடன் இருக்கவில்லை?
மீடியாவை சந்திக்காதது ஏன்?
ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் உடன் இருந்த சிவக்குமார், இதுவரை ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஏன் இதுவரை பேசவி��்லை? ஜெ.மரணத்துக்குப் பிறகு அவர் ஏன் மீடியாக்களை சந்திக்கவில்லை?
பரிந்துரைத்தது யார்
மன அழுத்தத்தைக் குறைக்கும் 'புரோத்தீடான்' (prothiaden)என்னும் மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுக்க பரிந்துரை செய்த மருத்துவர் யார்? அதை நீண்டகாலம் உட்கொள்ள பரிந்துரை செய்தது ஏன்?
வீடியோ ஆதாரம் வந்தது எப்படி
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தன்னை போட்டோ எடுக்க வேண்டாம் என அவரே கூறியதாகவும் அதனால் போட்டோ எடுக்கவில்லை என்றும் தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறது. ஆனால், அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நலமுடன் இருந்ததற்கான போட்டோ, வீடியோ ஆதாரம் உள்ளது என்று கூறியது எப்படி?
கன்னட சேனல்களுக்கு ஏன் எதிர்ப்பில்லை
சில கன்னட சேனல்களில் சசிகலா ஜெயலலிதாவை தள்ளிவிடுவது போல் காட்சிகள் வெளியானது. ஆனால் இதுவரை அதிமுக தரப்பிலோ, சசிகலா தரப்பிலோ அதற்கு எந்த கண்டனங்களும் மறுப்பும் வெளியிடாதது ஏன்?
இப்படி பல குழப்பங்கள், சந்தேகங்கள் உள்ளன.. விளக்கத்தான் ஆள் இல்லை.