ஜெ. பேனர் கிழிப்பால் அ.தி.மு.கவினர் கொந்தளிப்பு- தமிழகம் முழுவதும் விஜயகாந்த் கொடும்பாவி எரிப்பு!!
தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனர் கிழிக்கப்பட்டதையடுத்து, தே.மு.தி.க
தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் பேனரை கிழிக்க உத்தரவிட்ட செய்தி காட்டுத் தீயாக
பரவியதால் தமிழகத்தின் பல இடங்களில் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்து அ.தி.மு.கவினர்
கண்டனம் தெரிவித்தனர்.
தே.மு.தி.க. சார்பில் தஞ்சையில் ரயிலடி தபால்நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தேமுதிகவினர் கிழித்து எரிந்தனர். இதுதொடர்பாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் விஜயகாந்த் கட்சி கொடி மரங்களை அகற்ற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனிடையே கும்பகோணத்தில் தேமுதிக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 காயம் அடைந்தனர். இதையடுத்து, முதல்வர் படம் குறித்து தரக்குறைவாக பேசியது, பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் 50 பேர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபபட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஓட்டேரி, படாலம் அருகே அ.தி.மு.க பிரமுகர் எழும்பூர் எபினேசர் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரிப்பதற்காக திரண்டு வந்தனர். 'அம்மாவின் படத்தை கிழித்தெறிந்த விஜயகாந்த்தே உன் திமிரை அடக்குவோம்' என கோஷமிட்டபடி விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர்.
மேலும், ஆரணி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் விஜயகாந்த் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களில் தே.மு.தி.க.-அ.தி.மு.க. கட்சியினரிடையே மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது.