இவர்கள்தான் 'தீய சக்திகளா' மிஸ்டர் டி.கே.எஸ். இளங்கோவன்?
சென்னை: செய்தியாளர்கள் குழுமியிருந்த இடத்தில் கூடியிருந்த திமுகவினருடன் தீய சக்திகள் ஊடுறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதான 11 பேருமே பக்கா திமுகவினர் என்று தெரிய வந்துள்ளது.
அப்படியானால் திமுகவினரையே அவர் தீய சக்திகள் என்று கூறுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
திமுகவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து தெரிவித்ததாக செய்திகள் பரவின.
இதையடுத்து செய்தி சேகரிப்பதற்காகவும், இதுகுறித்த உண்மை நிலையை அறிவதற்காகவும், முடிந்தால் மு.க.ஸ்டாலினின் கருத்தை அறிவதற்காகவும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், டிவி கேமராமேன்கள், அறிவாலயம், ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் குவிந்தனர். இது வழக்கமான ஒன்றுதான்.
மேலும் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் தேர்தல் தோல்வி என்பதாலும், அழகிரி, ஸ்டாலின் இடையே நிலவும் கடும் பனிப் போர் சூழலிலும், ஸ்டாலின் விலகுவதால், மீண்டும் அழகிரி உள்ளே வருவாரோ என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளதாலும் வழக்கத்தை விட அதிக அளவிலான செய்தி எதிர்பார்ப்பு பத்திரிக்கையாளர்களிடையே நிலவியதால், வழக்கத்தை விட அதிக அளவிலான செய்தியாளர்கள் குழுமியிருந்தனர்.
ஆனால் ஸ்டாலின் வீட்டு முன்பு திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை ரவுடிகள் போல நேற்று திமுகவினர் தாக்கிய செயல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. வழக்கமாக இதுபோன்ர ட்ரீட்மென்ட்டை இன்னொரு கட்சியிடமிருந்துதான் அதிக அளவில் சந்தித்து பழக்கப்பட்டவர்கள் பத்திரிக்கையாளர்கள். எனவே திமுகவிடமிருந்து இப்படிப்பட்ட அடிதடியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். எனினும், பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்காக திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் கைதான 11 பேருமே பக்கா திமுகவினர். அனைவரும் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்களும் கூட. அதிலும் அனைவருமே இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். இளைஞர் அணி மு.க.ஸ்டாலின் வசம்தான் உள்ளது. இவர்களில் 7 பேர் பகுதி செயலாளர்களாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாதாரண கட்சித் தொண்டர்கள்.
இவர்களைத்தான் தீய சக்திகள் என்று இளங்கோவன் கூறுகிறாரா என்று தெரியவில்லை.