மெரினாவில் காணும் பொங்கல்: குற்ற செயலில் ஈடுபட்ட 35 பேர் கைது
சென்னை: சென்னை மெரினா பீச்சில் நேற்று களை கட்டிய காணும் பொங்கல் கொண்டாட்ட கூட்டத்தில் குற்ற செயலில் ஈடுபட்டதாக 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொதுவாகவே சென்னையில் கடற்கரைகள், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி பூங்கா போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் குறிப்பாக காணும் பொங்கலான நேற்று சுமார் 3 லட்சம் மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலை முதலே வரத்தொடங்கிய மக்கள் கூட்டம், நேரம் செல்லச்செல்ல அதிகரித்தது. முன்எச்சரிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும், பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் குற்றச்செயல்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கூட்டத்தை கண்காணித்தனர்.
இதன் அடிப்படையில், ஜேப்படி திருடர்கள், பெண்களிடம் ஈவ்டீசிங் செய்தவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் என 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.