கொசஸ்தலைக்காக திடீரென கமல் களமிறங்கியது ஏன்? சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் பேட்டி- Exclusive
நடிகர் கமல்ஹாசன் எண்ணூரில் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டதன் பின்னணி குறித்து அவருடன் சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் தமிழ் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.
Recommended Video
சென்னை : மாசடைந்து போன கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதியை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று கூறியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். அத்துடன் இன்று அதிகாலை கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியில் திடீர் கள ஆய்வும் கமல் மேற்கொண்டார்.
இது குறித்து அவருடன் சென்றிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் தமிழ் ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவு கலக்கும் விவகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே நடிகர் கமல்ஹாசன் விவரங்களை சேகரித்தார். அத்தோடு, நாங்களும் நேரில் சென்று அவரை சந்தித்து பல தரவுகளை கொடுத்து பேசிவந்தோம்.
இந்த நிலையில், நேற்றைக்கு இது குறித்து விரிவான டிவிட்டர் பதிவு வெளியிட்டார். கமலின் முயற்சிக்கு மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனர். அதையும் கமல் உணர்ந்தார். இதையடுத்து, நேரில் சென்று பார்வையிடமுடியுமா என்று கமல் எங்களிடம் கேட்டர்.
கள ஆய்வுக்கு வந்த கமல்
அவரை அழைத்துச் செல்வதில் எங்களுக்கும் உடன்பாடு இருந்தது. சூரிய உதயமாகும் வேளையில் கமல் ஆழ்வார்பேட்டையிலிருந்து கிளம்பி எண்ணூர் வந்தார். பிறகு மாசு கலந்த கொசஸ்தலை ஆற்றினை பார்வையிட்டார். இந்த இடம் தனக்கு ஏற்னவே பரிச்சயமான ஒரு இடம் என்றார்.
கொசஸ்தலை பற்றி கவலை
பல வருடங்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு காட்சிகள் இங்கு எடுத்ததாகவும், அப்போது கொசஸ்தலை ஆற்று நீர் குடிக்கும் தரத்தில் இருந்ததாகவும் கமல் சொன்னார். இப்போது மாசடைந்து, பாழ் ஆகியுள்ளதை கவனித்தார். கமல் இன்று நடிகராக வரவில்லை என்றுதான் கருதுகிறேன். ஆட்டோகிராப் போடவில்லை முழுமையான ஆர்வத்துடன் பிரச்னையை கேட்டறிந்தார். அங்கிருந்த மக்களையும் சந்தித்து பேசினார்.
கமல்வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்
மற்ற அரசியவாதிகள், நடிகர்களைவிட கமல் மிக நேர்த்தியாக பிரச்னைகளை உள்வாங்குகிறார் என்று சொல்லலாம். உண்மையான அக்கறையோடு இந்த விவரகாரத்தை கமல் பேசிவருகிறார். நாங்கள் பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களை இந்த இடத்திற்கு அழைத்துவந்துள்ளோம். ஒவ்வொருவரின் வருகையும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொசஸ்தலை காப்பாற்றப்படவேண்டும்
கமலின் பங்கேற்பு இந்த விவகாரம் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று கருதுகிறோம். நீங்களே இதனால்தான் இப்போது என்னை அழைத்துள்ளீர்கள். இப்படியாக கொசஸ்தலை ஆறு காப்பாற்றவேண்டும் என்பதே கமல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகளைச் சந்தித்து பேசினோம். சிலர் பிரச்னையை புரிந்துகொண்டு தீர்வு காண விரும்புகின்றனர். ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது. வளர்ச்சி அவசியம்தான் ஆனால், வளங்களை சிதைத்துவிட்டு, சுற்றுச்சூழல் சீர்கெடு மூலம் கிடைக்கும் வளர்ச்சி அவசியமா என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இவ்வாறு நித்யானந்த் ஜெயராமன் கூறினார்.