விவசாயிகளுடன் கமல் சந்திப்பு.. வயலிலிருந்து அரசியல் பயணம் தொடங்குகிறதா?
விவசாயிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து அரசை விமர்சித்து வந்தார். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தின.
கடந்த 28-ம் தேதி எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நிலக்கரி சாம்பல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடமும் குறைகளையும் கேட்டறிந்தார்.
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மேற்கொண்டுள்ளார்.
இந்த கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிஆர் பாண்டியன், தமிழகத்தில் வேளாண் தொழில் நலிவடைந்து உள்ளது. முற்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகம் தான் விளைகிறது. விவசாயிகளுக்கு புதிய கடன்கள் மறுக்கப்படுகிறது.
விவசாயிகள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில், தனியாரை அனுமதித்ததால் 40 சதவீதம் விவசாயிகளுக்கு இன்னும் பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடுகின்றனர். இந்த கூட்டம் விவசாயிகள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
விவசாயிகள் சங்க கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்த பி.ஆர்.பாண்டியன், 'நடிகர் கமல்ஹாசன் முற்போக்கு சிந்தனையாளர். தமிழகத்தில் விவசாயம் தான் அரசியல் என்று கூறி வருகிறார். எனவே அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் கமல்ஹாசன் நடிகர் என்பதால் மக்களிடையே விவசாயிகள் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்தனர். நடிகர் ஆரி தொடங்கியுள்ள 'நானும் ஒரு விவசாயி' என்ற அமைப்பிலும் கமல் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.