காமராஜர் 112–வது பிறந்தநாள்: ஜெயலலிதா, ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை
சென்னை: காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கறையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம் மற்றும் மணி மண்டபத்தில் உள்ள சிலைகளுக்கு கலெக்டர் ஹரிகரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா மலர் அஞ்சலி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 112-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கறையில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.
காமராஜருக்கு மரியாதை
சென்னை தியாகராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், கடற்கரைச் சாலை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சத்தியமூர்த்திபவனில் பிறந்தநாள்
காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப் படத்துக்கு ஞானதேசிகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
டி.ராஜேந்தர் மரியாதை
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் கொண்டாட்டம்
விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம் மற்றும் மணிமண்டபம் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நூற்பு வேள்வி
காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் நினைவு இல்லத்துக்கு வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நோட்டு புத்தகங்களை கொண்டு வந்து காமராஜரின் சிலை முன்பு வைத்தனர். நினைவு இல்லத்தின் முன்பு பெண்கள் நூற்புவேள்வி நடத்தினர்.
கோவில்களில் அன்னதானம்
காமராஜர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்குப் போட்டிகள்
காமராஜர் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.