சங்கரராமன் கொலை, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு... அடுத்தடுத்து விடுதலையான ஜெயேந்திரர்
சென்னை: தனக்கு எதிராக அரசு தொடர்ந்த சங்கரராமன் கொலைவழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுதலையாகியுள்ளார் காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரர். கிட்டத்தட்ட 2004ம் ஆண்டில் இருந்து 12 ஆண்டுகாலமாக கோர்ட் படிகளில் ஏறி இறங்கிய ஜெயேந்திரருக்கு 80வது வயதில் சற்றே நிம்மதி கிடைத்துள்ளது என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவில் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 2004ம் ஆண்டு நவம்பர் 12ந் தேதி தீபாவாளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
ரவி சுப்பிரமணியன் அப்ரூவர்
வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இடம் பெற்றிருந்த ரவி சுப்ரமணியன், அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
செங்கல்பட்டு டூ புதுச்சேரி
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 1875 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர்
தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
சாட்சிகளும் பல்டிகளும்
இந்த வழக்கில், சங்கராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர்.இதில் 187 சாட்சிகளை மட்டும் புதுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இவர்களிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் பல்டி அடித்தனர்.
வெட்டிக்கொலை
இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன் என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
23 பேர் மீது வழக்கு
25 பேரில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவர் ஆனதாலும் கதிரவன் வெட்டி கொலை செய்யப்பட்டதாலும் எஞ்சிய 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.
அனைவரும் விடுதலை
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி நீதிபதி முருகன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல்
சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன். இவரை, கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி மர்மநபர்கள் இருவர் வீடு புகுந்து ராதாகிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.
போலீஸ் வழக்குப் பதிவு
தாக்குதலுக்கு ஆளான அனைவரும் மருத்துவமனை சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காஞ்சீபுரம் தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சோமசேகர கனபாடிகள்
போலீசார் நடத்திய விசாரணையில், சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிராகவும், அவர் மீது குற்றம் சுமத்தியும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு மொட்டை கடிதங்கள் பல சென்றன. இந்த கடிதங்களை ராதாகிருஷ்ணன் அனுப்புவதாக நினைத்து அவர் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது.
ஜெயேந்திரர் மீது வழக்கு
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த், கண்ணன், குமார், லட்சுமணன், பூமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார்.
குற்றச்சாட்டுகள் பதிவு
இந்த வழக்கு, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்துவிட்டனர். ரவி சுப்பிரமணியன் அப்ரூவராகிவிட்டார். சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
81 பேர் சாட்சியம்
காவல்துறை தரப்பில் ரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 81 பேர் சாட்சியம் அளித்தனர். 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.ஜெயேந்திரர் உள்பட 9 பேரின் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு, ஏப்ரல் 29 ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராஜமாணிக்கம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
9 பேரும் விடுதலை
இதைத் தொடர்ந்து காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜமாணிக்கம், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் சுந்தரேசய்யர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
80 வயதில் நிம்மதி
காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரருக்கு 80 வயதாகிறது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகாலமாகவே கோர்ட் படியேறி வருகிறார். இந்த நிலையில் தனக்கு எதிராக அரசு தொடர்ந்த சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதன் மூலம் நிம்மதியடைந்துள்ளார்.