பிறந்த நாள்... கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து 'ஆசி' வாங்கிய கனிமொழி!!
சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியின் இளைய மகளும் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியின் 47வது பிறந்தாள் இன்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. தமது பிறந்த நாளையொட்டி கருணாநிதி மற்றும் சகோதரரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் கனிமொழி.
ராஜ்யசபா திமுக குழுத் தலைவர் கனிமொழி தனது 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். சென்னை சி.ஐ.டி காலனி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் கனிமொழி கேக் வெட்டி முதல் கேக்கை கருணாநிதிக்கு ஊட்டினார்.
பின்னர் கருணாநிதி - ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து கனிமொழி ஆசி பெற்றார். அவருக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
இதை தொடர்ந்து சகோதரரும் தி.மு.க. பொருளாருமான மு.க. ஸ்டாலின் கனிமொழி வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலிலும் விழுந்து கனிமொழி ஆசி பெற்றார்.
பிறந்த நாளையொட்டி கனிமொழி வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டுப்பட்டு இருந்தன.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் செல்வராஜ், பூங்கோதை, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, சற்குண பாண்டியன், விஜயாதாயன்பன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிஐடி இல்லத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரத்ததான வாகனத்தில் ஏராளமான திமுகவினர் ரத்ததானம் செய்தனர். கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில், அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களுடன் நேற்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஒட்டியுள்ள போஸ்டரில், "தமிழ் இன முதல்வரின் காவிய புதல்வி" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் கனிமொழியின் பிறந்த நாளை மனித நேய தினமாகவும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
சமாதானம்?
தி.மு.க.வில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டாலும் சகோதரர் என்ற அடிப்படையில் அவரது ஆதரவாளராக இருந்து வருபவர் கனிமொழி. இதனால் ஸ்டாலின் தரப்பு அதிருப்தியில் இருந்து வந்தது.
அண்மையில்கூட கனிமொழிக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவி தரப்படுவது குறித்து ஸ்டாலினுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆ. ராசாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்துவிட்டு கனிமொழிக்கு மகளிர் அணிச் செயலாளர் பதவியைத் தரலாம் என்று ஸ்டாலின் யோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதில் கனிமொழி அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலினின் காலில் விழுந்து கனிமொழி ஆசீர்வாதம் வாங்கியிருப்பதும் ஸ்டாலினும் ராஜாத்தி அம்மாளுடன் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததும் 'சமாதான'மாகிவிட்டார்களோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.