கனிமொழியை விடாத ஆனந்தி சசிதரன்... சிக்கலில் திமுக
சென்னை: இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை சரணடைய தூண்டியது தாம்தான் என்ற குற்றச்சாட்டை திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனால் கனிமொழி தனது மனசாட்சிப்படி நடந்து கொள்ளட்டும் என்று ஆனந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திரிகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான எழிலன் சசிதரன், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், ஆனால் சரணடைந்த பின்னர் அவரை காணவில்லை என்றும், எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறும் இலங்கை அரசை சசிதரனின் மனைவி ஆனந்தி வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் அவ்வபோது போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே இறுதிப்போரின்போது, தனது கணவரை சரணடைய தூண்டியது கனிமொழிதான் என்று ஆனந்தி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். சரணடைவதற்கு முன்னதாக திமுக எம்.பி. கனிமொழியுடன், சசிதரன் சேட்டிலைட் போனில் பேசியதாகவும் பரபரப்பை பற்றவைத்தார் ஆனந்தி. ஊடகங்களிலும் இது விவாதப்பொருளானது.
இந்நிலையில் தம்மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கனிமொழி எம்.பி., விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், அவரை சரணடையுமாறு தான் கூறவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய அரசின் சார்பிலோ அல்லது இலங்கை அரசின் சார்பிலோ யாரையும் சரணடையச் சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
யார் இந்த ஆனந்தி
இத்தனை ஆண்டு காலம் கழித்து இந்த விவகாரத்தை கிளப்பியிருக்கும் ஆனந்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் சுழிபுரம் இவரது சொந்த ஊர். விக்டோரியா கல்லூரியில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். புலிகள் இயக்கத்தில் உறுப்பினர் இல்லையாம். ஆனால் விடுதலைப்புலிகளின் ஆளுகையின் போது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நிர்வாக உதவியாக பணிபுரிந்தார்.
எழிலனுடன் திருமணம்
1998ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வவுனியா பகுதி அரசியல் பிரிவு தலைவராக இருந்த எழிலன் சசிதரனை திருமணம் செய்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதிதான் சசிதரன் சரணடைந்தார் என்று கூறும் ஆனந்தி, இதற்கு காரணம் கனிமொழிதான் என்று பேட்டியளித்துள்ளார். நேற்றைய தினம் பிரபல டிவி சேனலின் விவாத நிகழ்ச்சியின் போது தொலைபேசி மூலம் பேசிய போதும் இதனை உறுதியாக கூறிய அவர், கனிமொழி தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளட்டும் என்றார். இந்த விவகாரம் ஈழத்தமிழர்களிடையே பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
டி.கே.எஸ் இளங்கோவன் பதில்
இது குறித்து பதிலளித்துள்ள திமுகவின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான டி.கே.எஸ் இளங்கோவன், ஆனந்தியின் புகார் ஆதாரமற்றது என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் அதிர்ச்சி
2016 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் திமுகவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட உள்ள ஸ்டாலின் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மதிமுகவின் நிலை
திமுக உடன் கூட்டணிக்கு தயாராகி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் இது அதிர்ச்சியாக உள்ளதாம். சர்வதேச அளவில் தமிழ் ஊடகங்களில் விவாதமாகி வரும் ஆனந்தியின் கூற்று உண்மையா? கனிமொழி கூறுவது உண்மையா? எதுவென்றாலும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.