கன்னியாகுமரியில் தனியார் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!
கன்னியாகுமரி, தலக்குளத்தில் தனியார் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி: தென் தாமரைகுளம் அருகே டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ளது தலக்குளம். இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான சுமார் 25க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.

இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதே தலக்குளம் பகுதியில் தனி நபர்களுக்கும் ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.
அவர்கள் இங்கிருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். ஆனால், குடிநீர் வடிகால் வாரியம் இப்பகுதியில் 40 முதல் 50 அடி வரை ஆழத்தில் மட்டுமே ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பல நூறு அடி ஆழம் வரை போர் போட்டு தண்ணீர் உறிஞ்சி எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதனால் பல்வேறு ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டன.
தற்போது தண்னீர் இல்லாத சூழலில், தனியார் போர்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து செல்லப்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து, குடிநீரின் தன்மையும் மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கடந்த வாரம் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் பொது மக்கள் தண்ணீர் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டம் இரவு வரை நீடித்ததால் பொதுமக்களிடம் கன்னியாகுமரி டிஎஸ்பி வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிடுமாறு கேட்டு கொண்ட அவர் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications