கபினி அணை நிரம்பியது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: கபினி அணை முழுவதுமாக நிரம்பியதால், மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர் முழுவதுமாகத் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது
திறக்கப்பட்ட கபிணிஅணை
கபினி அணை முற்றிலும் நிரம்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறிய நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வியாழக்கிழமை காலை வந்தடைந்தது.
கே.ஆர்.எஸ். அணை
இதேபோல,கர்நாடக மாநிலத்தில் மற்றொரு முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணை மண்டியாவில் அமைந்துள்ளது. 124.40 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 91.30 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 747 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 10 ஆயிரத்து 128 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
19 ஆயிரம் கனஅடிநீர்
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காலையில் 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 19 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 48 அடியாக இருந்தது. நீர் இருப்பு 16.53 டி.எம்.சி.யாக இருந்தது. அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.