மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல்.. விளக்கமளிப்பாரா ஜெ.?.... கேட்கிறார் கருணாநிதி
சென்னை: தமிழகத்தில், திட்டமிட்டு மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி முதல்வர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற மின் வாரிய பணியாளர், செல்வராஜ் என்பவர், பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அதில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறுப்பில், நீண்ட காலம் இருந்த சில அதிகாரிகள், செயற்கையான முறையில் மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், புதிய மின் திட்டங்கள் உருவாவதை தடுத்தனர். ஏற்கனவே பணிகள் நடந்து வந்த மின் திட்டங்களை தாமதப்படுத்தினர்.
அதை சரிக்கட்ட, தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து, அபரிமிதமான விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதற்காக, மாநில அரசுக்கு சொந்தமான, மூன்று மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தியை நிறுத்தி, மின் பற்றாக்குறையைச் செயற்கையாக உருவாக்கினர்.
பல ஆயிரம் கோடி முதலீடு
அதுமட்டுமல்ல, காற்றாலை மின் பிரிவின் மூலமாக மட்டும், 24,309 கோடி ரூபாய், கையாடல் செய்யப்பட்டு உள்ளது; அந்த கையாடல் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார மீட்டர் வாங்குவதில், 6,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி
அந்த முறைகேட்டுக்கு பின்னும், 4,500 கோடி ரூபாய்க்கு, மின்சார மீட்டர் கொள்முதல் செய்துள்ளனர் என்றெல்லாம், புகாரில் தெரிவித்திருக்கிறார், அந்த மின் வாரிய அலுவலர். அவர் முடிவாகக் கூறும் போது, 'ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் நடந்திருக்கும் இந்த ஊழல் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ஏற்படுத்த வேண்டும்' என்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர்நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கில், பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஏராளமான கேள்விகளை எழுப்பியதோடு, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர் நீதிமன்ற ஆய்வுக்காக, ஆகஸ்ட் 10ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கின்றனர்.
முதல்வர் விளக்கம் தருவாரா?
இந்த பொதுநல மனுவுக்கு, உயர் நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்திடும் அதே வேளையில், முதல்வர் ஜெயலலிதா, மக்கள் மன்றத்திலும் விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.