100 வயது வரை வாழ்வேன்... படை திரட்டுங்கள்... கருணாநிதி அழைப்பு
சென்னை: தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மாசுக்களை போக்கி நிலையான ஆட்சி அமைவதற்கு படை திரட்டுவோம், அதற்கு தமிழக மக்கள் தோள் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முத்தமிழ் பேரவையின் 37-வது ஆண்டு இசை விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்.ரமணி தலைமை தாங்கினார். வழுவூர் ரவி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இயல் செல்வம் விருதை மனுஷ்யபுத்திரனுக்கும், ராஜரத்னா விருதை பேட்டைவாய்த்தலை எஸ்.சண்முகத்திற்கும், நாதஸ்வர செல்வம் விருதுகளை சின்னையா, முரளிதரனுக்கும், இசை செல்வம் விருதை சோபனா விக்னேசுக்கும் தவில் செல்வம் விருதை கணேசனுக்கும், மிருதங்க செல்வம் விருதை எம்.ஆர்.சீனிவாசனுக்கும் வழங்கினார்.
இந்த விழாவில் கருணாநிதியின் கொள்ளு பேத்தி காருண்ய ஜோதியின் பரதநாட்டியம் நடந்தது. அதனை கருணாநிதி மேடையின் கீழ் அமர்ந்திருந்து ரசித்து பார்த்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்தியமந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் பாண்டிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கருணாநிதி பேசியதாவது:-
தொழில் மீது கொண்ட காதல்...
இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து உங்களுக்காக பாடுபட்டு கொண்டு இருக்கிறேன் என்றால், அதற்காக நான் பெற்ற பேறு, ஆண்டவன் அருளால் கிடைத்தது அல்ல, என் உழைப்பால், என் தொழில் மீது கொண்ட காதலால் தான். பெரியார், அண்ணா உருவமாக தொண்டர்களை நான் பார்க்கிறேன். இந்த இயக்கத்திற்கு சோதனைகள் வந்தபோதிலும் தொண்டர்கள் தோள் கொடுத்தார்கள்.
தமிழை ஆளும் தகுதி...
இந்த மாநிலத்தை ஆள்வதற்கான தகுதி பெற்றாலும், பெறாவிட்டாலும், தமிழை ஆளுகிற தகுதியை யாராலும் நம்மிடம் இருந்து பிரித்து விட முடியாது. தமிழ் தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம்முடைய தாய்-தந்தை தமிழ்நாடு தான். இன்றைக்கு தமிழுக்கும், செம்மொழி விருதுக்கு ஆபத்து வந்துள்ளது. தமிழன் என்று மார்தட்டிக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். தமிழை காக்க வேண்டிய ஊக்கத்தை உங்களுக்கு நான் தருகிறேன்.
ஏமாற்ற முடியாது...
தமிழ் மக்களை இனி யாரும் பணத்தால் ஏமாற்ற முடியாது. நம்முடைய முயற்சிக்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களை வீழ்த்த நீங்கள் வர வேண்டும். தமிழர்களுக்கு வீரமும், தீரமும் உண்டு. நம்மை சுற்றி வஞ்சக வலை வீசினாலும், யாரை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாம் நாமாக இருப்போம். சுயமரியாதைக்காரராக வாழ்வோம். தன்மானத்தை இழப்பதா? இன்னுயிரை இழப்பதா? என்றால் நாம் தன்மானத்திற்காக இன்னுயிரை இழப்போம்.
தேறுதலுக்கான பேச்சு...
தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்கள், அண்ணன்-தம்பிகளாக வாழும் தோழர்களுடன் வியூகம் அமைப்போம், வெற்றி பெறுவோம். இதை தேர்தல் நேர பேச்சாக எடுத்துக்கொள்ள கூடாது. இது தேர்தலுக்கான பேச்சும் அல்ல. ஆனால் தமிழன் தேறுதலுக்கான பேச்சு. தமிழன் தமிழர்களை விட்டுக்கொடுக்காமல், தமிழை விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும்.
தமிழுக்கு தோல்வி கிடையாது...
100 வயது வரை நான் உங்களுடன் இருப்பேன் என்றால், உடலில் தளர்ச்சி இருக்கும். அந்த தளர்ச்சியை போக்க நான் உங்களை தான் நம்பியிருக்கிறேன். நாம் எல்லோரும் தமிழை வாழ வைப்போம். தமிழுக்கு என்றுமே தோல்வி கிடையாது.
நிலையான ஆட்சி...
ஓய்வறியாது உழைத்து தமிழக மக்களை காப்பாற்ற உறுதி எடுத்து பாடுபடுவோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாசுவை, அவமானங்களை போக்கி நிலையான ஆட்சியை அமைய தமிழக மக்கள் தோள் கொடுத்து வலிமை தர, அந்த பணியை தொடங்குங்கள், அந்த படையை திரட்டுங்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.