கருணாநிதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.. 2 நாளில் வீடு திரும்புவார்.. கனிமொழி தகவல்
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டார். அவரது உடல் சோர்வடைந்த காரணத்தால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்து வரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கனிமொழி செய்தியாளர்களிடம், கருணாநிதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.