டாஸ்மாக் கடையை மூட கோரி போராடியவர்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல்- கருணாநிதி கண்டனம்
சென்னை: டாஸ்மாக் கடையை மூடக் கோரி சென்னையில் போராடியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
டாஸ்மாக் கடையை மூடக் கோரி இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையினரையும், காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, காவல்துறையினரின் அராஜகம் இனியாவது நிறுத்தப்பட வேண்டுமென்று எச்சரிக்கிறேன்
5 ஆண்டுகாலம் வாய் திறக்கவில்லை
முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டு மக்களை எதுவும் தெரியாதவர்கள், சுலபத்தில் ஏமாற்றி விடலாம் என்று எண்ணிக் கொண்டே தொடர்ந்து அவருடைய பாணியில் காரியங்களை ஆற்றி வருகிறார். கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றி எப்போதாவது ஜெயலலிதா வாய் திறந்திருக்கிறாரா?
திமுகவால் மாற்றம்
தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும், அதற்கான ஆணையோ, சட்டமோ தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் உடனடியாகக் கொண்டுவரப்படும் என்று நான் அறிவித்த பிறகும் கூட, சட்டப் பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் மதுவிலக்கைப் படிப்படியாகக் கூடத் தமிழகத்தில் கொண்டு வர இயலாது என்றே அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு, தமிழகத்திலே மதுவிலக்குக் கொள்கைக்கும், அதுபற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் செய்த அறிவிப்புக்கும் உருவான வரவேற்பையும் ஆதரவையும் எண்ணிப் பார்த்து, ஜெயலலிதா அ.தி.மு.க. மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் போவதாகச் சொல்கிறார்.
சசிபெருமாள் மறைவு
படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவர்களுடைய கொள்கை என்றால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜெயலலிதா செய்த அறிவிப்புகள் என்ன? மேற்கொண்ட முன் முயற்சிகள் என்ன? மதுவிலக்குக்காகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைந்ததற்கு யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்?
வன்முறை வெறியாட்டங்கள்
சென்னையில் பல இடங்களில் மாணவர்கள் மதுவிலக்குக்காக போராட்டம் நடத்தினர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது காவல் துறையினர் அவர்கள் மீதும் தடியடி நடத்திக் கைது செய்தனர். மதுவிலக்குக்காக "டாஸ்மாக்" கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க. வின் காவல் துறை ஆடிய வன்முறை வெறியாட்டங்களுக்கெல்லாம் யார் காரணம்?
கொலைவெறித்தாக்குதல்
மதுவிலக்குக் கொள்கைக்காகத் தமிழகமே ஒருமித்துக் குரல் கொடுத்து வரும் இந்த நேரத்திலே கூட நேற்றையதினம் சென்னையில் மணலி மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர்கள் மீது காவல் துறையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை ஏடுகளில் புகைப்படங்கள் வாயிலாகவும், தொலைக் காட்சிகளிலும் பார்க்க முடிந்தது. போராட்டம் நடத்திய தாய்மார்களை காவல் துறையினர் தரதர வென்று இழுத்துச் செல்வதையும், பூட்ஸ் கால்களால் எட்டி உதைப்பதையும், ரத்தம் சொட்டச் சொட்ட பெண்கள் தாக்கப்படுவதையும் கண்ட யாரும் இந்த ஆட்சியினரைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள்.
கபட நாடகம் அம்பலம்
இந்த வன்முறைச் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள்; 10 பெண்களின் மண்டை உடைந்துள்ளது. இவ்வாறு மதுவிலக்குக் கொள்கைக்காக போராடுபவர்களைக் கடுமையாகத் தாக்கிய நிலையில் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவேன் என்று அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் மற்றும் ஒரு கபட நாடகம் என்பது திட்டவட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.