திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாகனம் மீது வன்முறை தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
கடந்த சனியன்று, விருத்தாச்சலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற அக்கட்சியின் தலைவர் கி.வீரமணியின் வாகனத்தை மர்மக் கும்பல் ஒன்றுத் தாக்கியது. இதற்கு தன் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
அதில், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு துணை போவது இது முதல் முறை இல்லை எனத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
மேலும், இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது...
‘28-9-2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருப்பதோடு; திராவிடர் கழகக் கொடிகளை சாய்த்தும், சுவரொட்டிகளை கிழித்தும் வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. அச்செயல்களை தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கல்லடிகளுக்கும், சொல்லடிகளுக்கும் மத்தியில் தாம் கொண்ட கொள்கையை கடைசி மூச்சு வரை, வன்முறை சிறிதும் கலக்காமல் பரப்பி வந்த தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், அவர் கண்ட இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துவோரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு துணை போவது இது முதல் முறை இல்லை என்றாலும், ஜனநாயகத்திலும் - கருத்துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த செயலை கண்டிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்' என இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.