அப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் மகள், செல்வி சன் நியூஸ் சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவருக்கும், கருணாநிதிக்குமான குடும்ப உறவின் மலரும் தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
செல்வி தனது பேட்டியில் கூறியதை பாருங்கள்: அம்மா சமைப்பதுதான் அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், நான் நிறையமுறை ஊட்டிவிட்டுள்ளேன்.
கடந்த 5 வருடங்களாக அப்பாவிற்கு நான்தான் சாப்பாடு ஸ்பூனில் ஊட்டிவிடுவேன். ஊட்டினால் அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும். நீ சாப்பாடு ஊட்டும் அழகே அழகம்மா. அவ்வளவு அழகாக ஊட்டுகிறாய் என்பார். அதையெல்லாம் நான் இப்போது மிஸ் செய்கிறேன் (தேம்பி அழுகிறார்).
ஊருக்கு போக விடமாட்டார்
அம்மா ஆரோக்கியம் குறைந்தபிறகு, பெங்களூருக்கு நான் ஒருநாள் சென்றால் கூட அப்பாவிற்கு கோபம் வந்துவிடும். ஊருக்கு போய்விட்டு நான் திரும்பி வந்து நல்லா இருக்கீங்களா என்று அப்பாவிடம் கேட்டால், நீதான் விட்டுட்டு போய்ட்டீயம்மா என்று கோபித்து கொள்வார். ஒருநாளும் என்னை போக விட மாட்டார். மீன் குழம்பு அப்பாவிற்கு ரொம்ப பிடிக்கும். இருப்பினும், கடந்த 5 வருடங்களாக அசைவ சாப்பாட்டை தவிர்த்துவிட்டார்.
|
காலையில் விழிப்பது
எங்கள் வீட்டில் முதலாவதாக எழுந்திருக்கும் நபர் அப்பாதான். நாலரை அல்லது, ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். நாங்கள் காலையில் தூங்கினால் கோபித்துக்கொள்வார். ஒருநாளாவது சூரிய உதயத்தை பாருங்களேன் என கூறுவார்.
பிடித்ததை செய்து கொடுப்பார்
இந்திரா காந்தி சென்னை வந்தபோது அவருக்கு கொழுக்கட்டை பிடிக்கும் என்பதால், எனது அத்தையிடம் கூறி, அதை தயாரித்து அவருக்கு வழங்கினார் அப்பா. எங்களையெல்லாம் அரசியல் தலைவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பார். டெல்லியில், இந்திரா காந்தி வீட்டுக்கு எங்களை அழைத்து சென்றுள்ளார். ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட்டுள்ளோம்.
மரியாதை முக்கியம்
எனக்கு சிறு வயது இருக்கும்போது, நாவலர் நெடுஞ்செழியன் ஒருமுறை வீட்டுக்கு வந்தபோது, அப்பாவிடம் சென்று நெடுஞ்செழியன் வந்துள்ளார் என கூறினேன். அதற்கு அப்பா கோபப்பட்டார். மரியாதை கொடுத்து நாவலர் என கூற வேண்டும் என்று, அப்பா கண்டிப்பாக கூறினார். அண்ணா என்றுதான் கூற வேண்டும். முழு பெயரை கூற கூடாது. எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தவர் எங்கள் அப்பா. இவ்வாறு செல்வி தெரிவித்தார்.