சுனாமியின் போது மக்களை சந்திக்காத கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டால் அமளி- திமுக வெளிநடப்பு!!
சென்னை: சுனாமியின் போது தொகுதி மக்களை திமுக தலைவர் கருணாநிதி சந்திக்கவில்லை என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஒட்டுமொத்தமாக திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், தி.மு.க. தலைவர் கருணாநிதி பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தி.மு.க. தலைவர் பெண்களின் பாதுகாவலராக இருக்கிறார் என்றார்.
வளர்மதி குறுக்கீடு
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வளர்மதி, தி.மு.க. உறுப்பினர் தவறான தகவலை கூறுகிறார். அவர்கள் கட்சியில் கூட பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை. முதல்வர் அம்மா பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரேதான் பெண்களின் பாதுகாவலராகவே உள்ளார். சுனாமி வந்த போது தொகுதி மக்களைப் பார்க்காமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டவர்தான் கருணாநிதி என்று கூறினார்.
சுனாமியின் உதவி செய்தார் கருணாநிதி
ஆனாலும் தொடர்ந்து பேசிய புஷ்பலீலா ஆல்பன், 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள் என்று பதிலளித்தார்.
மருத்துவமனையில் கருணாநிதி- ஜெ.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது நான்தான் முதல்வராக இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு இடங்களில் சந்தித்து ஆறுதல் கூறினேன். உதவிகளை வழங்கினேன். ஆனால் அப்போது சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த தி.மு.க. தலைவர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டார். அவர் சொந்த தொகுதி மக்களை கூட சந்திக்கவில்லை என்று கூறினார்.
அன்பழகன் குறுக்கீடு
முதல்வர் பேசி முடிப்பதற்குள் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் சபாநாயகர் தனபால் அதை அனுமதிக்கவில்லை.
திமுகவினர் கோரிக்கை
பின்னர் திமுகவின் துரைமுருகன் எழுந்து முதல்வர் பேசியது குறித்து விளக்கம் அளிக்க அனுமதி கோரினார். அவருக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று அனுமதி கோரினர். இதற்கு எதிராக அதிமுகவினரும் முழக்கங்கள் எழுப்ப கூச்சல் குழப்பம் நிலவியது.
சபா அனுமதி மறுப்பு
இருப்பினும் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, திமுக உறுப்பினர்களுக்கு சபை விதிகள் தெரியவில்லை. ஒரு அமைச்சரோ அல்லது முதல்வரே விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு உறுப்பினர் சார்பாக மற்றொரு உறுப்பினர் பேச முடியாது என்றார். தொடர்ந்து கோரிக்கை விடுத்த திமுக எம்.எல்.ஏக்களை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
திமுக வெளிநடப்பு
ஆனால் அதை ஏற்க மறுத்த திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சபையில் இந்த பிரச்சினை குறித்து தேவையில்லாமல் தி.மு.க. தலைவரைப் பற்றி அமைச்சரும், முதல்வரும் பேசினர். அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு கேட்டபோது சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. எனவே சபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்றார்.