''அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக்கிறேன்"
நான் உடனே மிகுந்த வேதனையோடு சொன்னேன். "தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டாவது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்"" என்று நான் வாதாடியதுடன்;
"முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர் மீது கை வைக்கிற போது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும், ரகளை நடக்கும். புரட்சித்தலைவர் இருக்கும்போது எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்; தாக்கியிருப்போம்.
அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும். பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்"" என்று வாதாடியதோடு "மூத்த தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?"" என்று கேட்டேன். அதற்கு அவர் "அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக்கிறேன்"" என்று சொன்னார்.
"நான் முடியாது"" என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து "சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கிக் கிழியுங்கள்"" என்று சொல்லி விட்டு மேலே போய்விட்டார்.
டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே,திரு. ராகவானந்தம், திரு.மாதவன், திரு.எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.நான் அங்கே போய், "யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?"" என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன்.