நல்லவேளை, நம்மை அழைக்கவில்லை! - கருணாநிதி
சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா கசப்பான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
ஜெயலலிதாவின் முழு தலையீட்டில் நடந்த இந்த விழாவுக்கு திமுக தலைவரும் தமிழ் சினிமாவின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதிக்கு அழைப்பு அழைப்பாமல் அவமதித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கருணாநிதி, "இந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்பது பற்றி வார இதழ்கள் எல்லாம் எழுதியதோடு, அங்கே நடைபெற்ற சில சம்பவங்களையெல்லாம் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் என்ன நேரிடுமோ என்ற கவலைதான் எனக்கு ஏற்படுகிறது.
ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, "நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே; நம் "தன்மானம்" காப்பாற்றப்பட்டதே" என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும் "பெருமைப்படுத்தி"(?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா!
இந்த விழா தொடர்பாக என்னைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டுப் பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னைச் சந்தித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்டார்கள். ஒரு மூத்த வார இதழின் செய்தியாளர் ஒருவர், தொலை பேசியில் தொடர்பு கொண்டு, "இவ்வளவு தவறுகள் நடைபெற்றிருக்கின்றன, அதைப் பற்றி நீங்கள் ஏன் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்" என்றெல்லாம் கேட்டார்.
அவர்களுக்கெல்லாம் நான் என்னுடைய நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.