வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்... அவர் கருணாநிதியை காணாதவர்!
மரண போராட்டத்தையும் வென்று வருவார் கருணாநிதி என்கின்றனர் தொண்டர்கள்.
Recommended Video
சென்னை: மரணத்துடன் போராடி வரும் தன் தலைவன் கண்டிப்பாக மீண்டு வருவார் என தொண்டர்கள் 200 சதவீத நம்பிக்கையை உரத்த குரலில் சொல்லி வருகிறார்கள்.
காவிரி மருத்துவமனையின் 7-வது அறிக்கையும் வந்துவிட்டது. அவரது உடல் மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தொண்டர்களோ, எத்தனையோ போராட்டங்களை எதிர்த்து வெற்றி கண்டவர் என் தலைவர், இந்த போராட்டத்திலும் மீண்டு வருவார் என கண்ணீர் பெருக்குடன் கூறுகிறார்கள்.
என்ன ஒரு அபரிமிதமான நம்பிக்கை!? ஆனால் அந்த நம்பிக்கையின் பின்னணியில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஏராளமான தழும்புகள் உள்ளன. ஏராளமான வரலாறுகள் உள்ளன.
கருணாநிதிக்கு இந்த போராட்டம் புதிதா என்ன? அவரது முதல் மற்றும் கடைசி போராட்டமும் தமிழகம் அறிந்ததே.. தமிழகம் உணர்ந்ததே... தமிழகம் சுவாசித்ததே..
10 வயதிலேயே போராட்டத்தை கையிலெடுத்தவராயிற்றே. முதல் போராட்டமே வெற்றிதானே. அதுவும் கல்வி உரிமைக்கான போராட்டமாயிற்றே.
1936-ம் ஆண்டு, திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் தன்னை ஆறாம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துவிட மறுப்பு கூறும்போது, 'என்னை இப்போ படிக்கவிடலைன்னா.. எதிரே இருக்கிற தெப்பக்குளத்தில் போய் குதிச்சு உயிரை போக்கிப்பேன்" என்றார். அப்படித்தானே படிக்க துவங்கினார். இப்படி சண்டை போட்டுவிட்டு வகுப்புக்கு சென்று அங்குள்ள சுவற்றில் "மு.க." என்று எழுதிவைத்து பெருமைப்பட்ட நிகழ்வு இன்னமும் அந்த வடு மாறாமல் அங்கு இருக்கிறதே.
அப்படி முதல் போராட்டத்தில் வெற்றி கண்ட தங்கள் தலைவர் இந்த மரண போராட்டத்திலும் நிச்சயம் வெல்லுவார் என்கிறார்கள் தொண்டர்கள். ஆனால், எது எதற்கோ போராடி இன்று கடைசியில் உயிருக்காக எமனுடன் போராடி வரும் நிலையை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று நெஞ்சு குமுறி வெடிக்கிறார்கள்.
"வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது" என நெஞ்சுக்கு நீதி 2-ம் பாகத்தில் கருணாநிதி சொன்னது தற்போது எவ்வளவு நிரூபணமாகி வருகிறது?