எஸ்எஸ்எல்சி தேர்வு: மாணவர்களுக்கு தொந்தவு தர வேண்டாம் கருணாநிதி
சென்னை: பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சிறப்பாகத் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் தேர்தல் பணிகளை அமைத்துக் கொள்ளுமாறு கழக உடன்பிறப்புகளையும் கூட்டணிக் கட்சித் தோழர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் சிறப்பாகத் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற வாழ்த்துகிறேன்.
ரேஷன் கடைகளில் விநியோகத்தில் சிக்கல்
தமிழகத்தில் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு குறைவாக உள்ளதால், ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் வினியோகிப்பதில் சிக்கல் உள்ளது. தமிழகத்தில் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தில், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்; ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது. இவற்றை கொள்முதல் செய்து, ரேஷன் கடை களுக்கு அனுப்பும் பணியை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகிறது. ரேஷனில் வினியோகிக்க, மாதம் ஒன்றுக்கு 11,350 டன் துவரம் பருப்பு - 8,250 டன் உளுத்தம் பருப்பு - 17,500 டன் பாமாயில் தேவை. சேமிப்புக் கிடங்குகளில், இரண்டு மாதங்களுக்குத் தேவையான பருப்பு வகைகள் இருப்பு வைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வாணிபக் கழக கிடங்குகளில் 15 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 7,500 டன் உளுத்தம்பருப்பு, 17 ஆயிரம் டன் பாமாயில் மட்டுமே உள்ளது. இதனால்தான் ரேஷன் கடைகளில் இவற்றை வினியோகிப்பதில் சிக்கல்.
அதிகாரிகளுக்கு கவனிப்பு
ரேஷனில் இந்தப் பொருள்களை வினியோகிக்க டெண்டர் கோரப்பட்டது. வழக்கம் போல டெண்டர் பேரம் முடியாததால்தான் சிக்கல். இந்தச் சிக்கலைத் தீர்க்க, டெண்டரை முடிவு செய்யும் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சொந்தச் செலவில் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறப்படுவதாக பத்திரிகை ஒன்று மார்ச் 5ஆம் தேதி செய்தி வெளியிட்டபோதிலும், அரசு தரப்பில் இதுவரை அதற்கு எந்த மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்நோக்கு மருத்துவமனை
ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்து விட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மூன்றாண்டு காலம் அதனை மூடி வைத்தார். தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் பழைய இடத்திலேயே தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில்தான் காலம் தள்ளு கிறார்கள்.
எல்லாம் வேடிக்கைதான்..
முதல்வர் அறையைத் தவிர மற்ற அமைச்சர்களுக்கும் நெருக்கடிதான். ஆனால் ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளிகையில், பல்நோக்கு மருத்துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேறொரு முதல்வர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாகக் கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும்.
40 பேர் மட்டுமே அனுமதி
தற்போது ஜெயலலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவமனையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத்தனை ஆயிரம் பேர் தெரியுமா? பல்நோக்கு மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப்பட்டார்களாம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.