ஆடு மேய்த்த கரூர் அன்புநாதனுக்கு பலகோடி சொத்து வந்தது எப்படி?
சென்னை: அய்யம்பாளையத்தில் ஆடு மேய்த்த அன்புநாதனுக்கு இத்தனை சொத்து எப்படி வந்தது என்பதுதான் கரூர் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது. ஒருநாளும் இல்லாத திருநாளாக திடீரென ரெய்டு நடந்தது எப்படி என்றும் கேட்கின்றனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை இந்த தேர்தலில் அவனை அட்ரஸ் இல்லாம ஆக்கணும் அதுக்காக எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என்று அன்புநாதன் விட்ட சவால்தான் இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
கரூரில் அன்புநான் வீட்டில் 5 கோடி கைப்பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் ரூ.5 கோடி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் சிக்கியது. இந்த பணம் எல்லாம் கரூரில் இருந்து வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பட்டுவாடா செய்யப்பட்டதாக என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அய்யம்பாளையம் அன்புநாதன்
அய்யம்பாளையம் அன்புநாதன் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு கரூருக்கு வந்து விட்டார். 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இவரது மொத்த வருமானமே ரூ.3 கோடிதான். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர், இன்று பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக மாறிவிட்டார்.
கோடி கோடியாக கொட்டிய பணம்
மாநிலம் முழுவதும் உள்ள திருட்டு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கி, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆதரவுடன் உண்மையான ஆர்சி புத்தகம் தயாரித்து பல மடங்கு அதிகமாக விற்பனை செய்து வந்தார். அதில் கோடிகோடியாக கொட்ட ஆரம்பித்தது. அண்ணாசாலை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அன்புநாதனுக்கு நிரந்த சூட் உண்டு.
வெளிநாடுகளில் முதலீடு
அன்புநாதனின் பாஸ்போர்ட்டை எடுத்துப் பார்த்தால், மாதத்தில் 15 நாட்கள் வெளிநாட்டிலும், 15 நாள் தமிழகத்திலும் இருப்பது தெரியும். தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில்தான் இருப்பார். திருச்சியை சேர்ந்த 4 எழுத்து ஆடிட்டர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் உள்ள ஆடிட்டரின் பழக்கம் அன்புநாதனுக்கு கிடைத்தது.
கல்வி நிறுவனங்களில் முதலீடு
திருச்சியில் உள்ள இரண்டு எழுத்து கல்லூரியின் உரிமையாளர் கடனில் சிக்கித் தவித்து வந்தார். அவருக்கு ரூ.70 கோடியை அன்புநாதன் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை கொடுக்க முடியாமல் அவர் தவித்து வந்ததால், தற்போது நிர்வாகம் அன்புநாதன் கைக்கு வந்து விட்டது. விரைவில் கல்லூரியை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி அன்புநாதன் கூறி வருகிறார். அதேபோல, கோவையில் உள்ள 3 எழுத்து கல்லூரியிலும் ரூ.38 கோடியை முதலீடு செய்துள்ளார்.
கர்நாடகாவில் முதலீடு
கோவை அருகில் உள்ள வெள்ளக்கிணறு என்ற இடத்தில் ப்ரிலியண்ட் மெட்ரிக்குலேசன் என்ற பள்ளியை ரூ.70 கோடிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் அன்புநாதன் வாங்கியுள்ளார். பள்ளி அருகில் உள்ள இடங்களை ரூ.10 கோடிக்கு அன்புநாதன் கடந்த மாதம் வாங்கினார். பெங்களூரில் மடிவாலா பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழகத்தை சேர்ந்த மேயர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தை ரூ.55 கோடிக்கு அன்புநாதன் வாங்கியுள்ளார்.
ஏமாற்றி செய்த முதலீடுகள்
இவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள், தமிழகத்தில் பல நூறு கோடிக்கு சொத்துக்கள் என்று அன்புநாதன் பெயரிலும், பினாமி பெயரிலும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏமாற்றி இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பணம் பட்டுவாடா?
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணத்தை கொண்டு சென்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மற்ற வழக்குகள் அவர் மீது வராமல் பார்த்துக் கொண்டார். இவ்வளவு செல்வாக்கு படைத்த அன்புநாதன்தான், தற்போது நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கும் ஆளும் கட்சிக்காக பணம் கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டிருந்தார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
சரிவுக்கு காரணமாக சவால்
இத்தனை நாட்களால் இல்லாமல் இப்போது இந்த திடீர் ரெய்டு நடப்பதற்குக் காரணம், மாஜி அமைச்சர்தான் என்கின்றனர். அமைச்சராக இருந்தபோது நட்பாக பழகிவிட்டு, பல ஆயிரம் கோடிகள் சேர்ந்த உடன் தனக்கே ஆப்பு வைத்த அன்புநாதனை சமயம் பார்த்து அடிக்க காத்துக்கொண்டிருந்தாராம் மாஜி. சட்டசபைத் தேர்தலில் பல கோடி செலவு செய்து தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று அன்புநாதன் சவால் விட்டது மாஜிக்கு தெரியவரவே, தேர்தல் அதிகாரிகளிடம் வசமாக பற்ற வைத்து விட்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. எது உண்மையோ யாருக்குத் தெரியும்?