டிக்கெட் கட்டண விவகாரத்தில் கடும் அதிருப்தி: காசி தியேட்டரில் மெர்சல் 'நோ' ரிலீஸ்
சென்னை காசி தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்படாது என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை காசி தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்படாது என்று தியேட்டர் நிர்வாகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்று பெறாத நிலையிலும் அப்படத்துக்கான முன்பதிவு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதனிடையே கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
Since we are not satisfied with the terms, we shall not be screening #Mersal for this Diwali. In case of any updates, will keep you posted
— Kasi Theatre (@kasi_theatre) October 15, 2017
அதன்படி சென்னையில் உள்ள மல்டிப்ளஸ் திரையரங்குகளில் ரூ.207 வரை உயர்த்தி விற்கலாம் என அரசு அறிவித்தது. அதேவேளையில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிகளில் குறைந்தபட்சம் எவ்வளவு, அதிகபட்சம் எவ்வளவு என்பது குறித்தும் அரசு நிர்ணயித்தது.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட எந்த நடிகரின் படமாக இருந்தாலும் தியேட்டர் உரி்மையாளர்கள் அதிக கட்டணத்துக்கு விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிபந்தனைகள் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் தாங்கள் மெர்சல் படத்தை திரையிடவில்லை என்றும் திரையிட ஏதேனும் முடிவு செய்தால் உடனே தெரிவிப்பதாகவும் சென்னை காசி தியேட்டர் நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.