முல்லைப் பெரியாறு அணை: 2ம் கட்ட பராமரிப்பு பணிக்காகச் சென்ற தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இரண்டாம் கட்ட பராமரிப்பு பணிகளுக்காக சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக ஷட்டர் பகுதியை பழுது பார்த்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 2ம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ஷட்டர்களில் ரப்பர் பொருத்தல் உள்ளிட்ட சில பணிகள் நடந்தது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்குத் தேவையான தடவாளப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஜீப்பில் சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் வல்லக்கடவு பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
உயர் அதிகாரிகளிடம் கேட்டு அனுமதிப்பதாக கூறிய கேரள வனத்துறையினர், தமிழக அதிகாரிகளை பல மணிநேரம் காத்திருக்க வைத்தனர். பின்னர் மாலையில் அனுமதி வழக்கினர். இதனால், தமிழக ஊழியர்களின் பணி பலமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
இதற்கிடையே, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு பிரச்சினை செய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங் அமைக்க மண் கொட்டிய கேரள வனத்துறை தொடர்ந்து தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.